காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு- நெல்லை, தூத்துக்குடியில் மறியல்- 500 பேர் கைது!
நெல்லை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ள கூடாது. காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்துக்கு மதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர். அத்துடன் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் முன்பு மறியல் செய்ய ஊர்வலகமாக புறப்பட்ட மதிமுக மாவட்ட செயலாளர்கள், பெருமாள், சரவணன் உள்பட 72 பேரை மாநகர துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தென்மண்டல அமைப்பாளர் வழக்கறிஞர் சிவகுமார் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 26 பேர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அமுதா மதியழகன் தலைமையில் கலந்து கொண்ட 26 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நெல்லை டவுன் சந்திப்பு, மேலப்பாளையம் பாளையங்கோட்டை பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன.
பாவூர்சத்திரம், விகேபுரம், அம்பை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில், வள்ளியூர், அம்பை, தென்காசி, சேரன்மகாதேவி உள்பட 10 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 532 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலூர் ரயில் நிலையத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயால், மீனவரணி அமைப்பாளர் நக்கீரன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 120 பேரை தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பெஸ்கி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications