மத்திய படை பாதுகாப்பின் கீழ் சென்னை உயர்நீதிமன்றம்- நுழைவுச் சீட்டு அவசியம் இருக்கணும்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மத்திய தொழில் படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க, தமிழக காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அறையின் முன்பு வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், உயர்நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு பணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றப் பாதுகாப்பு பணியில் தென்னிந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 450 வீரர்களும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 200 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி உயர்நீதிமன்றத்திற்கும் பிற நீதிமன்றங்களுக்கும் இடையே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வரும் அனைவரும் பரிசோதனைக்குப் பின்னரே உள்ள அனுமதிக்கப்படுகின்றன. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் நீதிமன்ற பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே மத்திய தொழில் படையின் பாதுகாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்று கருதப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் தினகரன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கத்தைவிட கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.