கத்திரி வெயில்: அடிக்கும் அனல் காற்று; குடையில்லாம போகாதீங்க!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இந்த காலக்கட்டததில் வெயிலின் தாக்கம் வழக்கமாக அதிகரிக்கும்.
ஆனாலும் கத்திரி வெயில் தொடங்கிய ஒரு சில நாட்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
அடிக்குது அனலு….
சென்னையில் அதிக மழை இல்லாததால் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று வெயில் கடுமையாக கொளுத்தியது. வாகனத்தில் செல்ல முடியாத அளவிற்கு சாலையில் அனல் காற்று வீசுகிறது.
சதமடித்த வெப்பம்
இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சென்னையில் நேற்று 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் பதிவான வெப்ப அளவை விட 2 டிகிரி அதிகம் பதிவாகி இருக்கிறது.
மீனம்பாக்கத்தில் அதிகம்
சென்னையை பொறுத்த வரை நுங்கம்பாக்கத்தில் 101 டிகிரி, மீனம்பாக்கத்தில் 103 டிகிரி வெப்ப நிலை பதிவாகி உள்ளது. கத்திரி வெயில் காலம் 28-ம் தேதி வரை இருப்பதால் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளநீர், ஜூஸ்வகைகள்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொது மக்கள் ஜூஸ் வகைகள், இளநீர், குளிர் பானங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
7 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
திருச்சி மாவட்டத்தில் 105 டிகிரி, கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் 103 டிகிரி, மதுரை, சேலம் மாவட்டங்களில் 102 டிகிரி, வேலூரில் 106.7 டிகிரி வரை வெப்பநிலை திங்கட்கிழமை பதிவானது.
குடையோட போங்க
சாலையோரங்களில் விற்கப்படும் தர்பூசணி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கி விட்டதால் உஷ்ணத்தை தவிர்க்க பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் குடையை அதிகளவு பயன்படுத்துகிறார்கள்.
கோடையிருந்து தப்பிக்க
சுட்டெரிக்கும் இந்த கோடைக்காலத்தில் சுத்தமான குடிநீரை அதிகளவு உட்கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் வாந்தி-பேதி ஏற்படும். டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்றவை பாதிக்கும்.
நீர்சத்துள்ள பழங்கள்
உடலில் உள்ள நீர் வியர்வையாக வெளியேறி விடுவதால் நீர் சத்துள்ள பழங்களை சாப்பிடலாம். தர்பூசணி, இளநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.
பருத்தி ஆடைகள்
அதனால் வெளியில் செல்லும் போது கருப்பு குடையை பயன்படுத்த வேண்டும். பொதுவாக நைலான், சிந்தடிக் ஆடைகளை கோடையில் அணிவதை தவிர்த்து காட்டன் உடைகளை அணிவது நல்லது. இத்தகைய தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றினால் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.