உள்ளாட்சி தேர்தல்: திமுகவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... திங்களன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்காததால் மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக.
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிட நீதிமன்றம் காலக்கெடு அளித்தும் இதுவரை வெளியிடாததால் திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக வரும் திங்கள்கிழமை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.
உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலதாமதம்
எனினும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் காலதாமதமாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது. இந்நிலையில் திமுக தொடர்ந்த அந்த வழக்கின் மீது கடந்த மாதம் 4-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.
செப்.18-க்குள் அறிவிக்கை
அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உள்ளாட்சி தேர்தலை நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுக்கும் அதற்கான அறிவிக்கையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
காலஅவகாசம்
தொகுதி மறுவரையறை மேற்கொள்ள இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் கால அவகாசத்தை மாநில தேர்தல் ஆணையம் எதிர்பார்த்து வருகிறது. இந்நிலையில் நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்து 14 நாள்கள் ஆகியும் இன்னும் அறிவிக்கை வெளியிடவில்லை.
திமுக மீண்டும் வழக்கு
நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிந்து 14 நாள்கள் ஆகியும் உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்காததால் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எ.ஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த வழக்கானது வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.