காய்ச்சலுக்காக வந்த சிறுவனுக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை.. மதுரை மருத்துவமனையின் அவலம்
காய்ச்சலுக்காக வந்த சிறுவனுக்கு துப்புரவு பணியாளர் ஒருவர் சிகிச்சை பார்த்த அவலம் மதுரை அருகே கருங்காலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை: காய்ச்சலுக்காக மதுரையை அடுத்த கருங்காலபட்டியில் அரசு சுகாதார மருத்துவமனைக்கு வந்த சிறுவனுக்கு துப்புரவு பணியாளர் சிகிக்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 5 பேராவது உயிரிழக்கின்றனர்.
தமிழக அரசும் 3 நாள்கள் தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியவை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று அழைக்கிறது. ஆனால் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் இல்லை
சுகாதார நிலையங்களில் செவிலியர்கள்தான் சிகிச்சை அளிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு காய்ச்சலுக்காக இன்று காலை ஒரு சிறுவன் வந்திருந்தார். அப்போது பணியில் மருத்துவர்களும், இல்லை என்று கூறப்படுகிறது.
துப்புரவு பணியாளர் ஊசி
இதனால் அங்கிருந்த துப்புரவு பணியாளர் பொன்னுதாயி அந்த சிறுவனுக்கு ஊசி போட்டு மேலும் சில மாத்திரைகளை அந்த சிறுவனின் தந்தையிடம் கொடுத்து சாப்பிட வைக்குமாறு கூறியுள்ளார். மிகவும் கைதேர்ந்தவரை போல் ஊசி போடுவது, மருந்து மாத்திரைகளை அளிப்பது போன்றவற்றை பார்க்கும் போது அந்த பணியாளருக்கு ஏற்க அனுபவம் இருப்பதாக தெரிகிறது.
உரிய பதில் இல்லை
மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத சமயங்களில் நோயாளிகளை சமாளிக்க துப்புரவு பணியாளருக்கு இவர்கள் பயிற்சி கொடுத்துள்ளது போன்ற தெரிகிறது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாதது குறித்து கேட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
|
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் மதுரை மாவட்டத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் துப்புரவு பணியாளருக்கு மருத்துவ பயிற்சி அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.