ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி விவசாயிகளுக்கு நிவாரணம்... முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் நிவாரண நிதியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த 30-ஆம் தேதி ஓகி புயல் தாக்கியதால் தென் தமிழகம் பலத்த சேதத்தை சந்தித்தது. இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்ட ரப்பர், வாழை, வாசனை பொருள்கள் என அனைத்து பயிர்களும் சேதமடைந்தன.

இதையடுத்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணங்களை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500- ரூ.63,500 வழங்கப்படும்.
ரப்பர் மர நடவு, ஊடுபயிர் சாகுபடிக்கு ஆகும் முழு செலவை ரூ. 50,000 அரசு மானியமாக வழங்கப்படும். மாநில பேரிடர் நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 10,000 சேர்த்து ரூ.28000 இடுபொருள் மானியம் வழங்கப்படும்.
ரப்பர் தோட்டங்களில் தேனி வளர்ப்புக்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 தேனி பெட்டிகள் வழங்கப்படும். புதிதாக கிராம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.28,000 வழங்கப்படும். மரவள்ளி, மிளகு, பலா உள்ளிட்ட பிற பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications