தீ வைச்சதும் அடிச்சதும் போலீஸ்... வன்முறையாளர் பழியோ அப்பாவி கதிராமங்கலம் மக்கள் மீதா?
சென்னை: கதிராமங்கலம் கிராம மக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக குற்றம்சாட்டி பேசியுள்ளார். எந்த ஒரு தமிழக முதல்வரும் செய்யாத தவறை, இதன்மூலம் இழைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
கூடங்குளத்தை போலவே கதிராமங்கலத்தில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமே என்றுதான் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
கள நிலவரம் தெரியாமல் ஏசி அறையில் இருந்தபடி சமூக வலைத்தளங்களில் அதை கொச்சைப்படுத்துவோர் படுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால் உண்மை நிலை என்பதை உள்ளூருக்குள் சென்று பார்ப்போரால்தான் அறிய முடியும்.
தடியடி
கதிராமங்கலத்தில் இரு தினங்கள் முன்பு போராடிய மக்கள் மீது கடும் தடியடியை கட்டவிழ்த்துவிட்டது காவல்துறை. இதுகுறித்து இன்று சட்டசபையில் எதிர்க்கட்சிககள் கேள்வி எழுப்பின.
மக்கள் மீது குற்றச்சாட்டு
பதிலளிப்பதாக நினைத்து, மக்கள் மீது பழிபோட்டு, போலீசாரை காக்கும் வேலையில் இறங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள்தான் போலீசாரை தாக்கியதாகவும், எனவே லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாகவும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதுவும் மக்கள் மன்றமான, சட்டசபையில் நின்றபடி மக்கள் மீது நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அவர்.
மறைமுக தாக்கு
ஜல்லிக்கட்டு போராட்டம் மொத்த தமிழகத்தையும் உலுக்கியபோது கூட அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதற்கு மக்களின் வன்முறை காரணம் என்று பேசியதில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குள் பிரிவினைவாதிகள் புகுந்துவிட்டனர், தீவிரவாத ஆதரவாளர்கள் புகுந்துவிட்டனர் என்றெல்லாம் சொல்லிதான் அரசாங்கங்கள், ஆட்டத்தை கலைக்க சதி செய்தனவே தவிர, நேரடியாக மக்களை பார்த்து குறை கூட எந்த அரசுக்கும் துணிவு வந்தது கிடையாது.
சரணடைந்த ஜெயலலிதா
கடந்த சட்டசபை தேர்தலின்போது டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் உக்கிரமாக நடந்தபோதுகூட, இரும்பு மனுஷி என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதாவே, டாஸ்மாக் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்துவிடுகிறேன் என்றுதான் மக்கள் முன்பு சரணடைந்தாரே, தவிர, டாஸ்மாக் போராளிகள் சமூக விரோதிகள் என்று வர்ணித்து மக்கள் கோபத்தை, வாங்கிக் கட்டிக்கொள்ளவில்லை. மக்கள் கோபத்தை அமைதிப்படுத்ததான் அனைத்து அரசுகளும் முயலுமே தவிர, அவர்கள் மீது பழிபோட்ட அரசாங்கங்கள் நிலைத்தது இல்லை.
வாழ்வாதாரம்
உண்மையிலேயே மக்கள் மீது தப்பு இருந்தால்கூட அதை நேரடியாக சொல்ல எந்த அரசும், முதல்வர்களும் முன்வந்தது கிடையாது. ஆனால், கதிராமங்கலத்தில், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை, இயற்கை வளத்தை பாதுகாக்க நடத்தும் போராட்டத்தை முன்வைத்து, அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பது சரியான செயல் அல்ல.
மக்களால் தேர்வான முதல்வர்
மக்களை நேரடியாக குற்றம்சாட்டிய முதல்வர் இதை வேண்டுமென்றே செய்தாரா, பக்குவம் இல்லாமல் அவ்வாறு கூறிவிட்டாரா என்பது தெரியாது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அரசியல் வரலாற்றில் அது பெரும் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரசே, மக்களை பழித்து பேசுவது என்பது மக்களாட்சி-ஜனநாயகத்திற்கு அழகல்லவே.