மக்கள் கோரிக்கைக்கு மதிப்பு.. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு: முதல்வர் விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பை துண்டித்தவர் ஜெயலலிதா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பை துண்டித்தவர் ஜெயலலிதா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவினர் போராட்டத்தால் சென்னை ராஜாஜி சாலை ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சட்டசபையில் நடந்தது குறித்தும் திமுகவினர் போராட்டம் குறித்தும் பேசினார். மேலும் அவர் பேசியதாவது, 2013ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர் ஜெயலலிதா.

மின் இணைப்பை துண்டித்தவர்
2013ஆம் ஆண்டே ஸ்டெர்லைட் ஆலை மின் இணைப்பை துண்டித்தவர் ஜெயலலிதா. கடந்த ஏப்ரல் 9ல், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பித்தது.

மின் இணைப்பு துண்டிப்பு
ஸ்டெர்லைட் கோரிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துவிட்டது. மாசுகட்டுப்பாடு வாரிய உத்தரவின்பேரில் ஆலைக்கு வழங்கிய மின் இணைப்பு இன்று துண்டிக்கப்பட்டுள்ளது.

உணர்வுகளை மதிக்கும்
இந்த அரசு மக்கள் உணர்வை மதித்துதான் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் இந்த அரசு என்றைக்கும் மக்களின் உணர்வுகளை மதிக்கும்.

தூண்டிவிட்டு போராட்டம்
ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை இந்த அரசு தொடருகிறது. வேண்டுமென்றே சில இயக்கத்தினர், எதிர்க்கட்சிகள் அப்பாவி பொதுமக்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

அனுமதி வழங்கவில்லை
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முடியாது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கவில்லை. தமிழகத்தின் தடையை மீறி பசுமைத் தீர்ப்பாயத்தில் சாதகமான தீர்ப்பை பெற்றது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.

நிபந்தனைகளுடன் அனுமதி
ஸ்டெர்லைட் ஆலைக்கு பசுமைத் தீர்ப்பாயம் சில நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்தது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் கோரிக்கை தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து முயற்சி
ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications