நைஜீரிய கஞ்சா... ரேவ் பார்ட்டி... அழிவின் பாதையில் கோவை கல்லூரி இளசுகள்
படிக்க வேண்டிய கல்லூரிப் பருவத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைக் கலாச்சாரத்தில் சிக்கி சீரழிகிறார்கள் கோவை கல்லூரி மாணவ, மாணவிகள் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை: போதைப் பொருட்கள் சகஜமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் இரவு நேர கொண்டாட்டங்கள், கோவையில் வேகமாகப் பரவி வருகிறது. ஒதுக்குப் புறமான ஏரியா பண்ணை வீடுகள் போதை ஆட்டங்கள் நடக்கும் இடமாக மாறிவிட்டன என்று பகுதிவாசிகள் பகீர் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில் உயர் கல்வி நிறுவனங்களும் நிறைந்துள்ளன. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்தும், மாணவ, மாணவிகள் கல்வி கற்க வருகின்றனர்.
குறிப்பாக, நைஜீரிய நாட்டில் இருந்து நிறைய பேர், உயர் கல்விக்காக கோவையில் வந்து தங்கியுள்ளனர். அதே போல அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் கோவை வந்துள்ளனர்.
படிக்க வந்த இவர்கள்தான் இப்போது போதையின் பிடியில் பாதைமாறிப் போயுள்ளனர் என்று அதிர வைக்கின்றனர் கோவை மக்கள். கல்லூரிகளின் வளாகங்களுக்கு வெளியே மிக தாராளமாக கிடைக்கும் போதைப் பொருளுக்குத்தான் மாணவர்கள் அடிமையாகின்றனர்.
நைஜீரிய கஞ்சா ரேவ் பார்ட்டி
அதன் பின், ரேவ் பார்ட்டி என சொல்லப்படும், இரவு நேர கொண்டாட்டங்களுக்கு மாணவர்கள் செல்கின்றனர். அங்கு நைஜீரிய நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சுவைக்கவும் தொடங்குகிறார்கள்.
மித மிஞ்சிய போதையில் இறந்த மாணவி
அண்மையில் ஒரு மாணவி, இரவு விருந்து கொண்டாட்டங்களுக்குச் சென்று, அதிகமான போதையை உடம்பில் ஏற்றி இருக்கிறார். அதில் மூச்சு திணறி இறந்து விட்டார். பண்ணை வீடு ஒன்றில் நடந்த இந்த சம்பவம் குறித்து, போலீஸுக்கு தெரிய வர, விசாரணைக்குப் பின், குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதால், இயற்கையான மரணமாக மாற்றி விட்டனர் அந்த மாணவியின் குடும்பத்தார்.
அரைகுறை ஆட்டம்
வாரத்தின் இறுதி நாட்களில் ஜோடி ஜோடியாக பண்ணை வீடுகளை நோக்கி கல்லூரி இளசுகள் செல்கின்றனர். அங்கு அரைகுறை வெளிச்சத்தில் போதைக்கு மயங்கி, வெகு நேரம் ஆட்டம் போடுகின்றனர்.
புதுப்புது போதையில்
தொடக்கத்தில் கோரஸ் எனப்படும் ஒயிட்னரை வைத்துப் போதை ஏற்றிக் கொண்டனர் மாணவர்கள். ஆனால், இப்போது, நைஜீரியாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் கோந்து போன்ற திரவத்தை, வெள்ளைத் தாளில் பெயிண்ட் போல தடவி காய வைக்கின்றனர்.
போதை சிகரெட்
அந்த தாளை துண்டித்து, சிகரெட் போல சுருட்டி புகைக்கின்றனர். புகையை உள்ளுக்குள் உறிஞ்சும்போது, போதை தலைக்கேறும் நிலையில் 24 மணி நேரம் தூங்குகிறார்கள் மாணவ, மாணவிகள்.
தடுக்க முடியாமல் தவிக்கும் போலீசார்
இந்த மாதிரியான கலாச்சார சீரழிவுகளை எப்படி தடுப்பது என்று தெரியாமல் கோவை போலீசார் விழி பிதுங்கி நிற்கிறார்கள். எப்படி நடவடிக்கை எடுப்பது என்றும் யார் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் தெரியவில்லை என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத போலீசார்.