கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு.. நாமக்கல், சீர்காழியில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் ஓஎன்ஜிசியை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்: கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறு அமைக்கும் ஓ.என்.ஜி.சியின் நடவடிக்கையை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு அருகே குமாரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் கூடிய ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் உயிரைக் காப்போம், நெடுவாசல், கதிராமங்கலத்தை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

இதே போன்று சீர்காழியை அடுத்த பூம்புகாரில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது எங்க ஏரியா உள்ளே வராதே என்று வித்தியாசமான முறையில் பதாகைகளை வைத்து மாணவர்கள் ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டவர்களை கண்டித்து இன்று நாகை மாவட்டம் குத்தாலத்தில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் குத்தாலம் பகுதி வெறிச்சோடியுள்ளது. இதனிடையே பழ.நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களை சந்திக்க இன்று கதிராமங்கலம் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications