சென்னையில் பஸ் தினம் கொண்டாட தடை... மாணவர்களுக்கு காவல்துறையின் 10 கட்டளைகள்
சென்னை: ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறினால் மாற்றுச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். பேருந்தில் பிரச்சனைகள் செய்யும் மாணவர்கள் குறித்து பேருந்து நடத்துநர்கள் மற்றும் பொது மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாணவர்கள் மோதலை தடுக்க 10 அதிரடி திட்டங்களை மாநகர காவல்துறை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது. மேலும், பேருந்தில் பயணிக்கும் மாணவர்களை கண்காணிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை ஆவடியில் இருந்து அண்ணாசதுக்கம் சென்ற தடம் எண் 27 ஹெச் பேருந்தில் மாநில கல்லூரி மாணசர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி இந்த பஸ் டே கொண்டாட்டத்தை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.
கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும், ரூட் தல போன்ற பிரச்சினைகளை முடிவு கட்ட பஸ்டே கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்படடிருந்தது.
இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லுரி திறக்கப்படும் முதல் நாள் ஆவடியில் இருந்து அண்ணாசதுக்கம் சென்ற தடம் எண் 27 ஹெச் பேருந்தில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடினர்.
இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கல்லூரியின் பெயர் போட்ட பேனர் வைத்தும், தாளம் போட்டு, பாட்டு பாடி கொண்டாடி வந்தனர். அப்போது பெல்ஸ் ரோடு அருகே வந்த போது காவல்துறையினர் அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி அவர்களை ஆர்பாட்டம் இல்லாமல் கல்லூரிக்குள் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, தியாகராய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்து ஊழியர்களின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 10 அதிரடி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. மாணவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் அறிவித்த 10 கட்டளைகள்
* பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் பஸ்களை ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும், பஸ்களின் கூரை மீது ஏறிநின்று பயணம் செய்வதற்கும் அனுமதி இல்லை.
* கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது.
* கல்லூரிக்கு வரும் மாணவர்களின் பைகள் மற்றும் உடைமைகளை கண்டிப்பாக சோதனை செய்யவேண்டும்.
* கல்லூரிகளின் நுழைவுவாயில், மாணவர்கள் விடுதி, கேண்டீன் மற்றும் கல்லூரி வளாகங்களில் கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.
* கல்லூரிக்குள் முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளியாட்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
* வன்முறை மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை கல்லூரியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யலாம்.
* மாணவர்களுக்கு அடிக்கடி கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
* பஸ்சில் கலாட்டா செய்யும் மாணவர்கள் குறித்து பொதுமக்கள் அல்லது பஸ் ஊழியர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவல் வந்தவுடன் போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
* வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து 95000 99100 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பலாம்.
* மாநகர பஸ்களில் கண்டிப்பாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
மேலும், சென்னையில் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் குறிப்பாக மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், பிற்பகலில் கல்லூரி முடியும் நேரத்திலும் இதுபோல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.