முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை குறைக்க வேண்டுமா? கேரளாவின் கோரிக்கை நியாயமா??
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்ட பிரச்சனை தலை தூக்கி இருக்கிறது.
Recommended Video
சென்னை: கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்ட பிரச்சனை தலை தூக்கி இருக்கிறது. நீர்மட்டத்தைக் குறைக்கக் கோருகிறது கேரளா. ஆனால் மறுத்துள்ளது தமிழகம்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டியுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெரும் மழை பெய்து வருகிறது. அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் கேரள வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும்.
இந்த நிலையில் கேரளாவில் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால், நீர் மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் சமயத்தில் முல்லைப்பெரியாறு பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது
152 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் நாம், இப்போது 142 அடி வரை நீரை தேக்கி வைத்து இருக்கிறோம். பெரிய சட்ட போராட்டத்திற்கு பின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 142 அடி வரைதான் நாம் முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்க முடியும். மீதம் உள்ள நீர் இடுக்கி அணைக்கு செல்லும். முல்லைப்பெரியாரில் இருக்கும் நீரை நாம் டன்னல்கள் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது என்ன கேட்கிறார்கள்
இந்த நிலையில்தான் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரை வெளியேற்றி 139 அடியாக அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கேரளா அரசு வழக்கு தொடுத்துள்ளது. அதாவது, உடனடியாக நீரின் அளவை குறைத்து, இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேரளா கோரிக்கை வைத்துள்ளது. இதன் மீதான விவாதம் இன்று நடக்க உள்ளது.
தமிழகம் மறுப்பது ஏன்?
ஆனால் தமிழகம் கேரளாவின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் உள்ளது. இப்போது தண்ணீர் திறந்துவிட்டால் கேரளாவிற்கு அது பெரிய ஆபத்தாக முடியும் என்று தமிழக அரசு வாதம் செய்கிறது. அதாவது இப்போது தண்ணீர் திறந்தால் மேலும், இடுக்கி அணைக்குத்தான் தண்ணீர் செல்லும். ஏற்கனவே நிரம்பி வழியும் அணை மேலும் வெள்ளத்தை உருவாக்கும் என்று தமிழக அரசு கேரளாவின் பாதுகாப்பு கருதி, மறுத்துள்ளது.
கேரளாவில் கோரிக்கை எதற்காக
ஆனால் இதில் கேரளா வேறு விதமான கோரிக்கையை வைக்கிறது. அதாவது முல்லைப்பெரியாறு அணை ஏற்கனவே 142 அடியை எட்டிவிட்டது. இதனால் தமிழக அரசு தண்ணீரை வேகமாக திறந்துவிட்டால், கேரளா மேலும் மூழ்கும். அதனால் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இப்போது திறந்துவிட்டுவிட்டு 139 அடியிலேயே சில நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
தவறு யார் பக்கம்
இதில் தமிழக அரசு வைத்திருக்கும் வாதம் முழுக்க முழுக்க கேரளாவின் பாதுகாப்பை மட்டும் கருதிதான். ஆனால் கேரளா அரசு, தமிழகம் தண்ணீரை மொத்தமாக திறந்துவிட்டுவிடும் என்று அச்சம் கொண்டு, இப்போதே நீர் தேக்க அளவை குறைக்க சொல்கிறது. இது இரண்டு மாநிலமும் கூடி விவாதிக்க வேண்டிய விஷயம் என்பதால், இன்று விவாதிக்கும் படி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.