போட்டியிடுங்கப்பா.. தலைக்கு 10 கோடி தர்றோம்.. காங்கிரஸ் விடுக்கும் அதிரடி 'ஆஃபர்'!
சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட முக்கிய வேட்பாளர்கள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் போட்டியிடுவோருக்கு தொகுதிக்கு ரூ. 10 கோடி தேர்தல் செலவு நிதியாக அளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில், அதிமுக , திமுக போன்ற திராவிட கட்சிகளின் தலைமையில் தனித்தனி அணியும், தேசிய கட்சிகளான பாஜக , கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தனித்தனி அணிகளும் களத்தில் உள்ளது.
இந்த நிலையில் , திமுக கூட்டணியில் நீடித்து வந்த காங்கிரஸ் கட்சியை திமுக அதன் பொதுக்குழுவில் வைத்து இனி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது. ஆனால், காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும், தமிழக காங்கரிஸ் தலைவர்கள் பலரும், திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இறங்கி வராத திமுக
மேலும், டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தமிழகம் வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். ஆனாலும், திமுக இறங்கி வரமறுத்துவிட்டது.

போட்டியிட மறுக்கும் தலைவர்கள்
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மற்றும் முன்னாள் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் வெளிப்படையாகவே அறிவித்தனர்.

ஆள் இல்லாமல் போனா அவமானமாச்சே...
மேலும், கூட்டணி இல்லை என்றால் கரை சேருவது கடினம் என கட்சி முன்னணி நிர்வாகிகள் பலரும் ஒதுங்க ஆரம்பித்தனர். இந்த தகவல் தலைமைக்கு தெரிய வரவே, போட்டியிடவே ஆள் இல்லை என்றால் கட்சிக்கு பெரிய அவமானம் என கருதி, தற்போது தொகுதியில் போட்டியிடும் நபர் ஒருவருக்கு தலா பத்து கோடி வழங்கப்படும் என அதன் தலைமை சிக்னல் காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

10 கோடி தந்தா வருவாங்களா...
இதன் காரணமாக தமிழக காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிட பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர்.. சிவகங்கையில் ப.சிதம்பரம்
இதற்கிடையே, சிவகங்கையில் ப.சிதம்பரமும், தேனியில் ஆருணும், திண்டுக்கல்லில் என்.எஸ்.வி.சித்தனும், மதுரையில் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, கரூரில் ஸ்டீபன் பாபு, ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications