காங்கிரஸ் தனித்துவிடப்படவில்லை.. 275 இடங்கள் இலக்கு: இது ஜி.கே.வாசன் சொன்னது!
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்படவில்லை.. 275 இடங்களை வெல்வதே எங்கள் இலக்கு என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் குற்றச்சாட்டை இந்தியாவில் உள்ள எந்த இயக்கமும் ஏற்கவில்லை. அரசியல் லாபத்துக்காகவும், சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும் இந்த பிரச்சினையை அவர்கள் கையில் எடுத்துள்ளதாக அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய அல்லது மாநில கட்சிகளில், கட்சிகளுக்குள்ளேயோ, தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. நேற்று உருவான ஆம்ஆத்மி கட்சியிலும் கூட பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து விடப்பட்டு உள்ளதாக கூறப்படுவது சரியானதல்ல. கடந்த 2004, 2009-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியை பிடித்தது.
அதேபோன்று வரும் தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணி அமைக்கும். இதில் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
காங்கிரஸ் 2004-ல் 140, 2009-ல் 205 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது, 2014-ல் 275 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இலங்கை கடற்படையினரின் செயலை தடுத்து நிறுத்தவேண்டும் என இலங்கை அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.