திமுகவை ஆதரிக்குமாறு ராகுலிடம் சொல்லியிருக்கிறேன்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்
கோவை: சட்டசபை தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் கூறியுள்ளதாக தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
டெல்லி சென்றிருந்த இளங்கோவன் இன்று கோவை திரும்பினார். அங்கு விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கும் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை, மோதலும் இல்லை, சண்டையும் இல்லை.

சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசினேன். கடந்த தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்து சந்தித்தோம் என்பதால் இந்தத் தேர்தலிலும் திமுகவையே ஆதரிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
காங்கிரஸ் மட்டும் கூட்டணியை நாடுவதாக கூறுவது தவறு. திராவிட இயக்கங்களே கூட கூட்டணி வைத்துத்தான் தேர்தலைச் சந்திக்கின்றன. அப்படி இருக்கும்போது காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதை எதிர்பார்க்கக் கூடாது.
கடந்த பொதுத் தேர்தலின்போது பணப் பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. இந்த முறையும் கூட அதேபோலத்தான் இருக்கிறார்கள் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications