வெங்காய மாலை… வெண்டக்கா கொண்டை... போராட்டத்தில் கலக்கிய காங்கிரஸ் மகளிரணி
சென்னை: வெங்காய மாலைகளை அணிந்து கொண்டும்... வெண்டைக்காய்களை கோர்த்து கொண்டைகளில் சூடிக்கொண்டும் காங்கிரஸ் கட்சியின் மகளிரணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கம்பி தடுக்கி காயமடைந்து ஐ.சி.யூவில் அட்மிட் ஆன மாநில காங்கிரஸ் மகளிரணித்தலைவி விஜயதாரணி பங்கேற்றார்.
விலைவாசி உயர்வு மற்றும் சுயஉதவி குழுக்களை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் மகளிர் காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிடப்பட்டது.

விஜயதாரணி தலைமை
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் விஜயதாரணி எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்திருந்தனர்.

பிச்சை எடுத்து போராட்டம்
தொடர்ந்து அவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மது அரக்கன் வேடமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் பங்கேற்றனர். வெங்கையா அண்ணாச்சி... வெங்காய விலை என்னாச்சு? என்ற பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

மத்திய அரசு முடிவு
இந்தியா முழுவதும் 16 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்களை கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மகளிர் சுய உதவி குழுக்களுக்காக ரூ.18 ஆயிரம் கோடி கொடுத்தேன் என்று சொல்கிறார். அந்த நிதி எங்கே போனது என்று தெரியவில்லை.

விலைவாசி உயர்வு
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிடும் அறிவிக்கும் அறிவிப்புகள் அனைத்தும் அறிவிப்புகளாகவே மட்டுமே உள்ளது. பருப்பு, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலைவாசி தொடர்ந்து எகிறிக் கொண்டே போகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாஸ் போராட்டம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பசுமை காய்கறி கடைகள் மூலம் வெங்காயம் ரூ.55க்கு வழங்கப்படும் என்று தமிழ அரசு அறிவித்தது. ஆனால் அந்த கடைகள் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. பசுமைப் பண்ணைக் கடைகள் வெகு தொலைவில் உள்ளன என்றார். கம்பி தடுக்கி ஐ.சி.யூவில் அட்மிட் ஆகி வெளியே வந்த பின்னர் விஜயதாரணி பங்கேற்ற முதல் போராட்டம் இது என்பதால் ஊடகங்களின் கவனத்தை கவரும் வகையில் பேசினார் விஜயதாரணி எம்.எல்.ஏ.












Click it and Unblock the Notifications