32 ஆண்டுகளாக இந்து இயக்க தலைவர்கள் திட்டமிட்டு கொலை: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் கொலை செய்யபப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி தலைவர் ராம. கோபாலன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் அண்மை காலமாக அல்ல கடந்த 32 ஆண்டுகளாகவே இந்து இயக்க தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாடி சுரேஷ் கொலையே இறுதியானதாக இருக்கட்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். ஏற்கனவே வேதனையில் இருந்த இயக்கத் தொண்டர்களின் புண்களில் மிளகாய் பொடி தூவியதை போன்று சுரேஷின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவித்து அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.
இந்து இயக்கத் தலைவர்கள் கொலை செய்யப்படுவது பற்றி நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. இது குறித்து இந்து இயக்கத் தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவிருக்கிறோம்.
தமிழர்களுக்கு உரிமை உள்ள பகுதி கச்சத்தீவு. தற்போது நீதிமன்றத்தில் தாக்க செய்யப்பட்ட மனு கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் அரசால் தயாரிக்கப்பட்டது. புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்காததால் பழைய நிலைப்பாட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்க தடை உள்ளது. ஆனால் வலையை மட்டும் உலர்த்தலாமாம். இது வேடிக்கையானது. ராமேஸ்வரத்தில் மீன் பிடிப்பவர்களா கச்சத்தீவுக்கு சென்று வலையை உலர்த்துவார்கள்?
கச்சத்தீவு ஒப்பந்தத்தை வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் கிழித்தெறிந்தார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி. இப்படிப்பட்ட நிலைப்பாட்டை பாஜக ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. இது குறித்து இன்று டெல்லிக்கு சென்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து பேசுவேன் என்றார்.