மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர் படுகொலை!
அரக்கோணம்: வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே மணல் கடத்தலை தடுத்த தலைமைக் காவலரை மணல் கொள்ளை கும்பல் ஒன்று டிராக்டர் ஏற்றி படுகொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் குசஸ்தல ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, தலைமைக் காவலர் கனகராஜ் ஞாயிறன்று காலை சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்றை காவலர் கனகராஜ் மறித்துள்ளார். ஆனால் வண்டியை நிறுத்தாத மணல் கடத்தல் கும்பல், அவர் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்துள்ளது.
தகவல் அறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு வடக்கு மண்டல ஐ.ஜி மஞ்சுநாதா உள்ளிட்ட உயர்போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட காவலரின் உடல் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே, காவலரை கொலை செய்ய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.
காவலர் கொல்லப்பட்ட இதே தக்கோலம் பகுதியில், ஏற்கனவே வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீதும் மணல் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
தக்கோலம் பகுதியில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.