சாரல் மழை... குளு குளு காற்றுடன் தொடங்கியது குற்றால சீசன்: குவியும் பயணிகள்
சென்னை: மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெல்லிய சாரலும், தென்றல் காற்றுமாய் சீசன் தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு முகாமிட தொடங்கியுள்ளனர்.
அருவிகள் நகரமான குற்றாலத்தில் மெல்லிய சாரலுடன் இதமான தென்றல் காற்று வீசுகிறது. கடந்த வாரம் வரை வறண்டு கிடந்த மெயினருவி, ஐந்தருவி பாறைகளில் தண்ணீர் ஓரளவிற்கு கொட்டுகிறது. இதனால் அங்கு வந்துள்ள பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலங்கள் ஆகும். இந்த சீசன் காலத்தில் உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போன்று வெண்ணிறத்தில் அருவிகள் கொட்டும்.
குளு குளு குற்றாலம்
சாரல் மழை... தென்றல் காற்று... மலைமீது மிதந்து செல்லும் மேகங்கள்... அவ்வப்போது வந்து செல்லும் இளம் மஞ்சள் வெயில் என குற்றாலம் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக உள்ளது. இங்கு நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர்.
சீசன் எப்போது?
கடந்த ஆண்டு சீசன் தாமதமாகவே தொடங்கியது என்றாலும் தண்ணீர் நவம்பர் இறுதிவரை கொட்டியது. இந்த ஆண்டு சீசன் எப்படி இருக்கும், குறித்த காலத்தில் தொடங்குமா அல்லது தாமதமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் நிலவியது.
சாரல் மழை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வியாழக்கிழமையன்று திடீரென மேக கூட்டங்கள் திரண்டு சுமார் அரை மணி நேரம் மெல்லிய சாரல் பெய்தது. நள்ளிரவில் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் விழத் துவங்கியது.
அருவிகளில் தண்ணீர்
வெள்ளிக்கிழமையன்றும் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக விழுந்த நிலையில் இன்று காலை மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும், அதேபோன்று ஐந்தருவியில் நள்ளிரவில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் விழுந்த நிலையில் இன்று காலை 2 பிரிவுகளில் மட்டும் தண்ணீர் வரத்து உள்ளது.
இதமான சீசன்
கடந்த ஒருவாரமாக குற்றாலத்தில் இதமான சூழல் நிலவிய நிலையில் இன்று அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீர் விழுவதால் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் குறித்த காலத்தில் துவங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
குவியும் பயணிகள்
இதேபோன்று சாரலும், அருவிகளிலும் தண்ணீரும் தொடர்ச்சியாக விழுந்தால் குற்றாலம் சீசன் களைகட்ட துவங்கும். திடீரென அருவிகளில் தண்ணீர் விழுந்ததால் இன்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
வியாபாரிகள் மகிழ்ச்சி
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் சீசன் களைகட்டும் என, உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளதால் சிறு வியாபாரிகளும், பழ வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.