உண்மையைத்தானே கமல்ஹாசன் சொன்னார்...தப்பில்லையே- முத்தரசன்
நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மைதானே, கை புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்று தெரிவித்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன். மேலும் கமலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் துணை நிற்கும்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்று கூறியுள்ளது உண்மைதானே, அதில் தப்பில்லையே என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை!
மிகச் சிறந்த திரைப்பட கலைஞர் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்திருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். இது கருத்து சுதந்திரத்தின் மிகவும் இயல்பான அரசியல் சட்ட ரீதியான வெளிபாடுதான்.
அத்துடன் அவர் உண்மையைத் தான் கூறி உள்ளார் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தமான கருத்தாகும். கை புண்ணிற்க்குக் கண்ணாடி தேவையில்லை. அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பதை, கூவத்தூர், குட்கா, ஆர்கே நகர் இடைத்தேர்தல் என அனைத்தும் அம்பலபடுத்தின. சாதாரண குடிமக்களிலிருந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புவரை, தமிழ்நாட்டு நிர்வாக நடைமுறையில் ஊழல் மலிந்திருப்பதை வெளிபடுத்தி வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு மிரட்டுகிற முறையில் எதிர்மறை கருத்துக்கள் கூறுவது கண்டனத்திற்குரியதாகும். நடிகர் கமல்ஹாசன் அவர்களை குறிவைத்து, மிரட்டும் வகையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை, சொல்லாடல்களை அமைச்சர்களே வெளிபடுத்துவது என்பது ஏற்புடைதல்ல.
நடிகர் கமல்ஹாசன் அவர்களை எச்சரிக்கும் வண்ணம் மிரட்டும் பாணியில் பேட்டி அளிப்பதை, கருத்து கூறுவதை, நிறுத்தி கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்வதோடு ஆட்சியாளர்கள் எத்தகைய உயரத்தில் இருந்தாலும் கருத்துகூற, குடிமக்களுக்கு முழுஉரிமை உண்டு என்பதனையும் அத்தகைய கருத்துரிமைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணைநிற்கும் என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகிறது." என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.