ஜெயலலிதா பிரதமராக இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தரும்- நல்லக்கண்ணு
விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று," பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று கூறுகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் முன் கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது நரேந்திர மோடிக்கும் பொருந்தும்.
இந்தியா பல்வேறு இன, மத மக்கள் வாழும் நாடு. ஆனால் பாஜக மதவெறியை தூண்டிவிடுகிறது. அம்பானி போன்றோருக்கு ஆதரவாக எரிபொருள் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனை பாஜகவோ, நரேந்திர மோடியோ எதிர்க்கவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3-வது அணியை உருவாக்கி வருகிறோம். அதற்காக தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். வேறு சில கட்சிகளும் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளன.
ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று அதிமுகவினர் பேசுவது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதுபோன்ற சூழல் உருவானால் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் " என்றார் அவர்.