கிரிக்கெட் மட்டை தலையில் தாக்கியதில் கோமாவுக்கு சென்ற நாமக்கல் மாணவர்!
நாமக்கல்லில் கிரிக்கெட் மட்டை தலையில் தாக்கி மாணவர் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
சேலம்: நாமக்கல்லில் கிரிக்கெட் விளையாடும் போது ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை தவறி மாணவரின் பின்னந்தலையில் பட்டதால் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தை அடுத்த சித்தம்பூண்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விக்னேஸ்வரன் (13). இவர் விட்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரும் சக மாணவர்களும் நேற்று பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் குப்புராஜ் அவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் மாணவர் ஒருவர் பந்தை வீசும் போது ஆசிரியர் குப்புராஜ் பந்தை அடிக்க முயற்சித்தார். அப்போது அவர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி அருகில் இருந்த விக்னேஸ்வரனின் பின்னந்தலையில் தாக்கியது. இதனால் அந்த மாணவர் மயங்கி விழுந்தார்.
விக்னேஸ்வரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.