தமிழ் புத்தாண்டில் மானத்தை வாங்கிய தமிழர்கள்.. சேலத்தில் ரசிகர்களிடம் படாதபாடு பட்ட கீர்த்தி சுரேஷ்
இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கடைக்குள் விரைந்து சென்று கீர்த்தி சுரேஷை உடனே அங்கிருந்து சென்றுவிடுமாறு கேட்டுக்கொண்டார். போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவசரமாக கீர்த்தி சுரேஷ் வெளியேறினார்.
சேலம்: சேலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க திரண்ட ரசிகர்களால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.
சேலத்திலுள்ள ஏ.வி.ஆர் ஸ்வர்ண மகால் நிறுவனம், எலைட் ஷாப்பை, ஓமலூர் சாலையிலுள்ள புதிய பஸ் நிலையம் அருகே இன்று திறந்தது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அறிந்ததும் ரசிகர்கள் குஷியடைந்தனர். காலை 9 மணிக்கே ரசிகர்கள் நகைக்கடை முன்பாக, திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கயிறு கட்டி போலீசார் ஒழுங்கு படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரசிகர்கள் மீது தடியடி
நகைக் கடைக்கு, கீர்த்தி சுரேஷ் கார் வந்ததும், ரசிகர்கள் மேலும் முண்டியடித்து முன்னேறினர். நகைக் கடைக்குள் அவர்கள் நுழைய முயன்றனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
கூட்டம் ஏறியது
விழாவில் பங்கேற்று லேசாக நடனம் ஆடிக் காண்பித்தார் கீர்த்தி சுரேஷ். ரசிகர்கள் அதை பக்கத்து பில்டிங்குகளில் ஏறி நின்று பார்த்து கை தட்டி ரசித்தனர். இதன்பிறகு கீர்த்து சுரேஷ் கடைக்குள் சென்று சுற்றி பார்த்தார். இந்த கேப்பில் அவர் வந்த செய்தி வேகமாக பரவியதால் ஓமலூர் சாலையில் ரசிகர்கள் மேலும், மேலும் கூடினர்
நோயாளிகளுக்கு அவதி
அரசு மருத்துவமனை அமைந்துள்ள அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டனர். கோபமடைந்த போலீசார், முண்டியடித்த ரசிகர்களை சாத்தி எடுக்க ஆரம்பித்தனர். ஆனால் ரசிகர்களோ ஒரு இஞ்ச் கூட நகருவதாக இல்லை. கீர்த்தி சுரேஷ் வெளியே வர வேண்டும், அவரை பார்த்தால்தான் வீட்டுக்கு திரும்புவோம் என கூறி அந்த இடத்தையே போராட்ட களமாக மாற்றினர்.
அவசர வெளியேற்றம்
மேலும், ரசிகர்கள் அனைவரும் செல்போன்களில் நிகழ்ச்சியை வீடியோவாக எடுக்க முண்டியடித்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கடைக்குள் விரைந்து சென்று கீர்த்தி சுரேஷை உடனே அங்கிருந்து சென்றுவிடுமாறு கேட்டுக்கொண்டார். போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவசரமாக கீர்த்தி சுரேஷ் வெளியேறினார். இதன்பிறகே நிலைமை சீரானது.
நயன்தாராவுக்காக குலுங்கியது
இப்படித்தான், 2 வருடங்ள் முன்பு, சேலத்தில் பிரபல துணிக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் பங்கேற்ற நடிகை நயன்தாரா வந்திருந்ததால், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். தமிழ் புத்தாண்டு தினமான இன்று, இப்படி தமிழர்கள் மானத்தை வாங்கிவிட்டனர் ரசிகர்கள்.