சம்பள பணம் வங்கியில் டெபாசிட்: பீடிக்கடையை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள்
நெல்லை: நெல்லை அருகே பீடிக்கடையில் சம்பளத்தை ரொக்கமாக அளிக்காமல் வங்கியில் டெபாசிட் செய்வதால் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டனர்.
மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து நெல்லை அருகே உள்ள பீடிக்கடை நிறுவனங்கள் வாரம் தோறும் வழங்கி வந்த சம்பள பணத்தை வரும் மூன்று மாதங்களுக்கு வங்கி கணக்கு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக 15 தொழிலாளர்களிடம் பீடி நிறுவனம் ஒப்புதல் கடிதம் வாங்கியுள்ளது. இதில் வரவு செலவு போக மீதி உள்ள சம்பள பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சம்மதிக்கிறேன் என கையெழுத்து போட்டுள்ளனர்.
வாரந்தோறும் வழங்கப்படும் கூலியை வைத்து தான் பெரும்பாலான குடும்ப செலவுகளை செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான பீடி தொழிலாளர்கள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். கூலியை ரொக்கமாக வழங்கக்கோரி நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடையம் பகுதி பீடிக்கடையை திடீரென முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கடையம் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் சில்லறை தட்டுப்பாட்டால் இரண்டு வாரம் மட்டும் வங்கி மூலம் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுமாறும், பிறகு வழக்கம் போல் ரொக்கமாக தருவதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பொருட்டு யாரும் உறுதி மொழி கடிதம் கொடுக்க வேண்டாம் என கூறியதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதே நிலை தான் பாவூசத்திரம், ஆலங்குளம் பகுதியில் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.