For Daily Alerts
Just In
வர்தா புயல் அதி தீவிரமானது: எண்ணூர் துறைமுகத்தில் 10ம் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வர்தா புயல் இன்று சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் எண்ணூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் சென்னைக்கு அருகே 180 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகலில் வர்தா புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி நிஷா புயல் சென்னையில் கரையைக் கடந்தது. அதற்கு பிறகு வர்தா புயல் கரையைக் கடக்க உள்ளது. வர்தா புயல் துறைமுகம் அல்லது சுற்றுவட்டாரத்தை புயல் தாக்கும் என்பதை குறிக்கும் வகையில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, காரைக்கால் புதுச்சேரியில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் :
- ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
- இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
- மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
- நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.
- 5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
- 6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
- 7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
- 8ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
- 9ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
- 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
- 11ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்ற எச்சரிக்கையாகும்.
Comments
English summary
The Chennai Ennore port hoisted storm warning flag signal number Ten in view of cyclone threat.There is likely to be heavy rainfall in Andhra Pradesh's Nellore and Tamil Naidu's Chennai as the cyclonic storm Varadha is set to make a land on Monday afternoon.