வர்தா தாக்கம்.. வேளச்சேரியில் பயணிகளோடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதா மாநகர பஸ்?
வர்தா புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை மாநகராட்சி பஸ் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக வெளியான சமூக வலைத்தள வீடியோக்களை போலீசார் மறுத்துள்ளனர்.
சென்னை: வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாநகராட்சி பஸ் இழுத்துச் செல்லப்பட்டதாக வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
வர்தா புயல் காரணமாக சென்னையில், பெரும் காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் நகரமெங்கும் தெருவுக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் கணக்கில் அடங்காத மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் கிடக்கிறது.

இந்நிலையில், வேளச்சேரி மெயின்ரோடு பகுதியில் மாநகராட்சி பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அதில் டிரைவருடன் சேர்த்து சுமார் 12 பேர் இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்த 'ஒன்இந்தியாதமிழ்' முயற்சி மேற்கொண்டது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, பஸ் விபத்தில் சிக்கியது தொடர்பான புகார் எதுவும் தங்களிடம் வரவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து வேளச்சேரி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, வெள்ளம் எதுவும் ஏற்படவில்லை என்றும், மரங்கள்தான் ஏகப்பட்டது சரிந்ததாகவும், இருப்பினும் பஸ்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications