கரையை கடக்கும் வர்தா புயல் - பகலிலேயே இருளில் மூழ்கிய சென்னை - பலத்த சேதம்!
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியவாறு கரையைக் கடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்துள்ளன.
சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னை நகரமே பகலிலேயே இருளில் மூழ்கியது. கனமழை காரணமாக சென்னை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. காற்று மற்றும் மழை வெளுத்து வாங்குவதால் மின் இணைப்புகளும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன
வர்தா புயல் சென்னைக்கு அருகே பழவேற்காடு - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடப்பதால் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வர்தா புயல் காரணமாக நள்ளிரவு தொடங்கி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காற்றின் வேகத்தால் மெரீனா, பட்டினப்பாக்கம், திருவெற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

முடங்கிய மக்கள்
வர்தா புயல் காரணமாக காஞ்சி, திருவள்ளூரில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நகரமும் பகலிலேயே இருளில் மூழ்கியதாக காட்சியளிக்கிறது.

கப்பல்கள் நிறுத்தம்
சென்னைக்கு அருகே 2 கடற்படை கப்பல்கள் மீட்புப் பணிக்காக தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. சிவாலிக், காட்மட் என்ற கடற்படை கப்பல்கள் சென்னைக்கு அருகில் கடலில் நிற்கின்றன. வர்தா புயல் வீசிய பிறகு மீட்புப் பணியில் ஈடுபட கடற்படையினர் தாயார் நிலையில் உள்ளனர். சென்னையில் 30 படகுகளுடன் கடற்படை வீரர்கள் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளனர்.

7 ராணுவக்குழுவினர் தயார்
பலத்த மழை பெய்வதால் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பதிக்கப்பட்டுள்ள பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 7 ராணுவ குழுவினர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயலின் விட்டம் 90 கி.மீ
வர்தா புயலின் விட்டம் 90 முதல் 100 கிலோ மீட்டர் ஆக காணப்படுகிறது. மரக்காணம் முதல் பழவேற்காடு வரை புயலின் விட்டம் விரிந்து காணப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய மண்டலத் தலைவர் எஸ்.பி.தம்பி கூறியுள்ளார்.

நிவாரண முகாம்கள்
சென்னையில் வர்தா புயல் தாக்கி வருகிறது. இதனால் பலத்த மழை பெய்து வருகிறது. கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 7357 பேர் பாதுகாப்பாக 54 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பேரிடர் மீட்புக்குழு
மக்களுக்கு தேவையான உணவு,மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடற்படைக்கு சொந்தமான விமானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர்கள் கொண்ட 30 குழுக்கள், படகுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள், உதவி பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications