"திஹார் ரிட்டர்ன்" டிடிவி தினகரனுடன் மேலும் 2 எம்எல்ஏக்கள் சந்திப்பு.. ஆதரவு எண்ணிக்கை 34 ஆக உயர்வு
டிடிவி தினகரனை அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர் மற்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ.,ரத்னசபாபதி ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவருக்கு 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தினகரனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில் இன்று மேலும் 2 எம்எல்ஏக்கள் அவரை சந்தித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் இருந்த டி.டி.வி.தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீனில் வெளிவந்த டி.டி.வி.தினகரன் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட போவதாக தெரிவித்தார்.

மேலும் தன்னை கட்சியிலிருந்து நீக்க பொதுச் செயலாளர் ஒருவருக்கே அதிகாரம் இருப்பதாக தெரவித்தார். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் அவரை சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஏற்கெனவே 32 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று மேலும் 2 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனை சந்தித்துள்ளனர். அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர் மற்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ.,ரத்னசபாபதி ஆகியோர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் அவருக்கு 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications