சிவாஜி யாருக்கு சொந்தம் …. சட்டசபையில் ருசிகர விவாதம்
சென்னை: சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தனியாக சென்றவர். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணியை தொடங்கினார் என்று ஜெயலலிதா கூறினார்.
சிவாஜி கணேசன் யாருக்குச் சொந்தம் என்று இன்று சட்டசபையில் ருசிகர விவாதம் நடைபெற்றது. சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து கருத்துக் கூறிய விஜயதாரணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதில் அளித்த முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எம்.எல்.ஏக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ் கட்சிக்காரர் என்பதால், அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர் என்று கூறினார்.
நடிகர் சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, தமிழக முன்னேற்றக் முன்னணி என்ற கட்சியை துவக்கினார். அவருக்கு நினைவிடம் அமைக்க காலதாமதம் ஆனதால் மணி மண்டபம் கட்ட அரசு முடிவு செய்திருந்தது என்றார்.
எனவே சிவாஜியை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று சட்டசபை உறுப்பினரை கேட்டுக் கொள்கிறேன் என்று விளக்கம் அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications