அப்படீன்னா தீபாவின் கதி?
அதிமுக அணிகள் இணைந்துவிட்ட நிலையில் தீபா பேரவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
சென்னை: அதிமுகவும் நானே.. கட்சி அலுவலகமும் நானே என வீட்டுக்குள் இருந்து முழங்கிக் கொண்டிருந்த தீபாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
அதிமுகவில் சசிகலா தலையெடுக்க தொடங்கியதை அக்கட்சி தொண்டர்கள் விரும்பவில்லை. புதிய தலைமையாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை நோக்கி படையெடுத்தனர் தொண்டர்கள்.
அலை அலையாக தீபா வீட்டு முன்னர் கூடி 'இளைய புரட்சித் தலைவி' வாழ்க என கூப்பாடு போட்டனர். சசிகலாவுக்கு சளைத்தவரா? நான் என இன்னொரு ஜெயலலிதாவாக கூடுவிட்டு கூடு பாய்ந்து 'இளைய அம்மா' அரிதாரம் பூசினார் தீபா.
சமாதி நாடகம்
அப்போது சசிகலாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய ஓபிஎஸ்ஸுடன் கை கோர்க்க முயற்சித்தார். இதற்காக ஜெயலலிதா சமாதியில் இரவு நேர நாடகமெல்லாம் கூட அரங்கேறியது.
ஓபிஎஸ் பக்கம்
ஆனால் தீபா பெயருக்கு பேரவை, கட்சி நடத்துவதாகவே தொண்டர்கள் உணர்ந்தனர். அதனால் அப்படியே அலை அலையாக ஓபிஎஸ் வீட்டுக்கு அதிமுக தொண்டர்கள் படையெடுத்தனர்.
காலி கூடாரம்
மெல்ல மெல்ல தீபாவின் வீடு முன்பு காலி கூடாராமனது. கட்சி, பதவி என்றெல்லாம் அழைத்துப் பார்த்தும் ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை. அண்மையில் தினகரன் குறித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் தீபா.
எதிர்காலம் என்னவோ?
அதில் அதிமுகவும் நானே கட்சி அலுவலகமும் நானே... என்றெல்லாம் ஓவராக முழங்கினார் தீபா. இப்போது அதிமுகவின் இரு அணிகளும் கைகோர்த்துவிட்டன. இனி தீபாவுக்கு அரசியல் எதிர்காலம் என்பது இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான்.