ஓட்டை உடைசல் பஸ்களை ஓட்டும் அனுபவமில்லாத ஓட்டுநர்கள்... தொமுச குற்றச்சாட்டு
பழுதடைந்த பஸ்களை அனுபவமில்லாத ஓட்டுநர்களை கொண்டு மாநில அரசு இயக்கி வருவதாக தொமுச குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை: பழுதடைந்த பஸ்களை அனுபவமில்லாத தனியார் மற்றும் பயிற்சி ஓட்டுநர்களை வைத்து அரசு இயக்கி வருவது கண்டிக்கத்தக்கது என்று தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
ரூ.7,000 கோடி நிலுவைத் தொகையை தராமல் மாநில அரசு நாமம் போட்டுவிட்டதாக கூறி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க தனியார் பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது.
மேலும் அரசு பேருந்துகளையும் தனியார், பயிற்சி ஓட்டுநர்களை கொண்டு இயக்கி வருவதால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து திமுக தொழிற்சங்கமான தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவிக்கையில், பழுதடைந்த பஸ்களை அனுபவமில்லாத டிரைவர்கள் ஓட்டுகின்றனர். இதனால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
அரசு போக்குவரத்து துறை மாதம்தோறும் ரூ.114 கோடி நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் எங்களை பணிக்கு திரும்புமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை அரசு உடனடியாக தர முன்வர வேண்டும். மேலும் தொழிலாளர்கள் அரசு அளித்த உத்தரவாதத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.