47 நாடுகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ராணுவ கண்காட்சி... சென்னையில் இன்று தொடக்கம்!
பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட ராணுவ கண்காட்சி சென்னை அருகே திருவடந்தையில் இன்று தொடங்குகிறது.
Recommended Video
சென்னை : பாதுகாப்புத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட ராணுவ கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் இன்று துவங்குகிறது. இன்று தொடங்கி ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்க நாளைய தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ளார்.
பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை அருகே திருவிடந்தை ராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'டிப் எக்ஸ்போ - 18' என, பெயரிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்பட, 47 நாடுகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி ஏப்ரல் 14 வரை ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.
நாட்டின் 10வது ராணுவ கண்காட்சியின் தொடக்க நாளான இன்று காலை 9:00 மணிக்கு வர்த்தக பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காலை, 10:00 மணி முதல் சர்வதேச பாதுகாப்பு துறையுடன், இந்தியா இணைவது உள்பட பல்வேறு கருத்தரங்குகள் மாலை வரை நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களின் நேரடி சாகசங்கள் நடைபெறுகின்றன.
இரண்டாம் நாளான நாளை காலை, 11:30மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பிரதமர் நாளை முறைப்படி, கண்காட்சியை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து இந்திய நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளையும் திறந்து வைத்து ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் நடத்தும் சாகச நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.
நாளை பிற்பகல் 2:30மணிக்கு, ராணுவ தொழில் பெருவழித்தடம் மற்றும் சிறு, குறு தொழில் கருத்தரங்கம், ராணுவ உற்பத்தி கொள்கைகள் மற்றும் மாநில ராணுவ தொழில் கொள்கைகள் குறித்த குழு விவாதம் நடைபெறுகிறது. 3ம் நாளான 13ம் தேதி காலை, 10:00 முதல் மதியம் 3:30 மணி வரை இந்தியா - ரஷ்யா ராணுவ தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும், கருத்தரங்கம் நடைபெறுகிறது. காலை, 11:30 முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 3:30 முதல் 4:00 மணி வரையும் முப்படை வீரர்களின் சாகசங்கள் நடைபெறுகின்றன.
கண்காட்சியின் இறுதி நாள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. பார்வையாளர்களுக்கு இலவசமாக கண்காட்சியை பார்வையிடலாம். அடையாள அட்டைகளை கொண்டு செல்வது கட்டாயம். ராணுவ கண்காட்சியில் பிரம்மாண்ட பீரங்கிகள், டாங்கிகள் என்று ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற கண்காட்சிகளிலேயே சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி மிகப்பெரியது. ராணுவ கண்காட்சியை முன்னிட்டு திருவிடந்தை பகுதி முழுவதும் ராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.