'புதிய இந்தியா' பிறந்த பிறகு முதல் வெள்ளம்.. மக்களே நினைத்தாலும் 2015 போல இப்போது உதவ முடியாதே!
டிமானிடைசேஷன், ஜிஎஸ்டிக்கு பின் சென்னையில் தற்போது பெரிய அளவில் கனமழை ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. தாம்பரம், வியாசர் பாடி போன்ற பகுதிகளில் வீட்டுக்குள் வெள்ளம் சென்று இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு அதிக அளவில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதுவரை எதுவுமே எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களிடம் பணப்புழக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக பொருட்களின் விலையும் அதிகம் ஆகியிருக்கிறது. இது மக்களை இன்னும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் கடும் மழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த மோசமான மழை காரணமாக சில இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. தாம்பரம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளிலும், வீட்டுக்களுக்கும் வெள்ளம் சென்று இருக்கிறது. மேலும் பல இடைகளில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையே மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

மக்கள் பாதிப்படைவார்கள்
இந்த நிலையில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட டிமானிடைசேஷன் என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், இந்த ஆண்டு அறிமுகப்படுத்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என ஆட்சியாளர்களை அறிவிக்க வைத்த நடவடிக்கைகள். ஆனால், இது மக்களை அதிக அளவில் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. மக்களின் கையில் பணப்புழக்கம் இல்லாத காரணத்தாலும், விற்கப்படும் பொருட்களின் விலையும் மிகவும் அதிகமாக இருப்பதாலும் தமிழக மக்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பணம் எடுக்க முடியாது
டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏடிஎம்கள் மூடப்பட்டு இருக்கின்றன. மேலும் முக்கால்வாசி ஏடிஎம்கள் சரியான பராமரிப்பு இன்றி வேலை செய்யாமல் இருக்கின்றது. அதையும் மீறி பணம் எடுக்கும் சமயங்களிலும் அதிக அளவு சேவை தொகை வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னையில் வெள்ளம் போன்ற பேரிடர்கள் நடக்கும் சமயங்களில் இன்னும் பல ஏடிஎம்கள் இயங்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவசர தேவைகளுக்கு பணம் எடுப்பது கடினம் ஆகும். மக்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருப்பதால் இது பிரச்சனையை ஏற்படுத்தும்.

விலை உயரும்
இந்த நிலையில் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையும் சென்னை மழையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் பேரிடர் காலங்களில் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது ஜிஎஸ்டி காரணமாக சாதாரண நாட்களிலேயே பொருள்களின் விலை மிகவும் அதிகமா இருக்கின்றது. இதையடுத்து பேரிடர் நேரும் பட்சத்தில் பொருட்களின் விலை இன்னும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவசரத்திற்கு வாங்கப்படும் உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலை மிகவும் அதிகம் ஆகும்.

உதவிகள் குறையும்
சென்னையில் 2015ல் நடந்த வெள்ளத்தின் போது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து மக்கள் வந்து உதவி செய்தனர். பணத்தை பார்க்காமல் அனைவரும் களத்தில் இறங்கி உதவி புரிந்தனர். ஆனால் ஜிஎஸ்டி, டிமானிடைசேஷனுக்கு பின் மக்கள் அதேபோல் அதிக அளவில் உதவுவார்களா என்பது சந்தேகம். களத்தில் வேலையாக செய்ய நிறைய பேர் வந்தாலும், பொருள் உதவி செய்யும் அளவுக்கு அனைவரிடமும் வசதி இருக்கிறதா என்பது தற்போது பெரும் கேள்விக் குறி ஆகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications