ஆளை கொன்று அச்சுறுத்தும் டெங்கு! என்ன செய்யலாம், எப்படி தப்பிக்கலாம்?
எமனாக மாறி ஆளை கொன்று வருகிறது டெங்கு கொசுக்கள். டெங்கு காய்ச்சல் வந்தாலே அஞ்சத் தேவையில்லை என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாகும்.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. எமனாக மாறிய கொசுவினால் உயிர்பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே மக்களின் அச்சமும் அதிகரித்து வருகிறது.
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசிப்பவர்களுக்காகவே இந்த கட்டுரை. முகத்துக்கு நேராக குத்தும் பகைவனை விட முட்டிக்கு கீழே கடிக்கும் கொசு மோசமானது என்று புதுமொழியே எழுதியுள்ளனர் நெட்டிசன்கள்.
டெங்கு காய்ச்சலுக்கான காரணமும், தப்பிக்கும் வழிமுறைகளையும் கூறியுள்ளனர் மருத்துவர்கள். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் டெங்கு வரும் முன் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
பகலில் கடிக்கும் கொசுக்கள்
ஏடிஸ் (Aedes) எனப்படும் கொசு கடிப்பதனாலே இந்த நோய் ஏற்படுகிறது. இந்த கொசு நன்னீரில்தான் உயிர்வாழும். பகல் நேரத்தில் மட்டுமே இவை கடிக்கும் என்கின்றனர். மருத்துவத்துறையினர்.
Recommended Video
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
வீட்டைச் சுற்றி தண்ணீ தேங்க விடாதீங்க மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தற்போது தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருக்கும். மழைநீரில்தான் இந்த கொசு உயிர்வாழும் என்பதால் வீட்டைச்சுற்றிலும் தண்ணீரை தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
அறிகுறிகள் என்னென்ன
சாதாரண காய்ச்சல் போல தொடங்கினாலும் கண்வலி, தலைவலி, மூட்டுவலி ஏற்படும். வயிற்றுவலியும் தொடர் வாந்தியும் இருக்கும். தசைகளில் வலி படிப்படியாக ஏற்பட்டு அதிகரிக்கும்.
சின்னச்சின்ன புள்ளிகள்
உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்படும். கால் முட்டிக்கு கீழே சிவந்த புள்ளிகள் தோன்றும். மூக்கில் ரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும்.
ரத்த பரிசோதனை அவசியம்
டெங்கு காய்ச்சல் என்பது அச்சம் ஏற்பட்டால் FBC என்று சொல்லப்படும் Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் எடுத்துப் பார்ப்பார்கள். ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து உறுதி செய்யலாம்.
நிச்சயம் டெங்குதான்
ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வரும் பட்சத்தில் தாக்கியிருப்பது டெங்கு காய்ச்சல்தான் என்று உறுதி செய்யலாம்.
ரத்தக்கசிவு அபாயம்
ரத்தம் கசிந்தால் எச்சரிக்கை டெங்கு காய்ச்சலின் அடுத்த அறிகுறி ரத்தம் கசிவது. ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்தம் உறைதல் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மூக்கில் இருந்தோ உடம்பில் அரிக்கும் இடங்களில் இருந்தோ ரத்தம் கசியலாம்.
ரத்தம் வெளியேறும்
குளுக்கோஸ் ஏற்றும் இடத்தில் இருந்தோ, மலம் கழிக்கும் போதே ரத்தம் வெளியேறும். இதுதான் அபாயகட்டம் என்கின்றனர் மருத்துவர்கள்.
மருத்துவமனையில் அனுமதி
டெங்கு அறிகுறி ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது. இந்த நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தனி அறையில் வைத்து நோயாளியின் தன்மையை அடிக்கடி கண்காணிக்கவேண்டும்.
அஞ்ச வேண்டாம் ஆபத்தில்லை
மனித உடம்பில் உள்ள ரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கை 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை இருக்கவேண்டும். படிப்படியாக குறைந்து வரும் பட்சத்தில் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும். ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 15,000 வரை குறைந்து ஆபத்தில் இருந்து மீண்டவர்கள் கூட இருக்கின்றனர்.
சத்தான ஜூஸ் குடிங்க
படிப்படியாக குறைந்த ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை சிகிச்சையைப் பொருத்து அதிகரிக்கும். டெங்கு பாதித்தவர்களுக்கு உடம்பில் நீர்ச்சத்து குறைந்து விடும். உடம்பில் நீர்ச்சத்தினை தக்கவைக்கவே குளுக்கோஸ் ஏற்றுக்கின்றனர். அவ்வப்போது ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பார்கள். அதை கண்டிப்பாக குடிக்கவேண்டும்.
டெங்குவில் இருந்து தப்பிக்கலாம்
ரத்தக்கசிவு ஏற்படும் வரை டெங்கு பற்றி அச்சம் கொள்ளத்தேவையில்லை. எனவே ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் இருப்பின் ரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரத்தம் ஏற்றுவார்கள்.
ஓய்வே முக்கிய மருந்து
டெங்கு பாதித்தவர்களுக்கு நல்ல ஓய்வு அவசியம். நீர்சத்துள்ள உணவுகளை அதிகம் கொடுக்கவேண்டும். இதன் மூலம் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்க முடியும். எந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்கிறோமோ அதே அளவிற்கு சிறுநீரை வெளியேற்ற வேண்டும். எந்த அளவிற்கு நம்முடைய உடம்பில் இருந்து நீர் வெளியேறுகிறது என்று கண்காணிக்கின்றனர். நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நிலவேம்பு குடிநீர் குடிங்க
நிலவேம்பு குடிநீர் இன்றைக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் அருமருந்தாக உள்ளது. நிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோரைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும். இவற்றை கசாயமாக காய்ச்சி குடிக்கலாம்.
மூலிகை டீ குடிங்க
பப்பாளி இலையை அரைத்து நன்கு சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் குடிக்க கொடுக்கலாம். அதேபோல் மூலிகை டீ சாப்பிடலாம். பசிக்கும் போது துளசி, இஞ்சி, கொத்தமல்லி, கருப்பட்டி கலந்த மூலிகை டீ தயாரித்து அதில் பிஸ்கெட் தொட்டு சாப்பிடக் கொடுக்கலாம். பசி அடங்கும் டெங்கு காய்ச்சலும் கட்டுப்படும்.
சரியான சிகிச்சை அவசியம்
டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களை கவனிக்காமல் விடுவதனால்தான் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. எனவே முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் டெங்குவில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே வந்த பின் டெங்கு வந்தபின் அவஸ்தைப் படுவதை விட வரும்முன் தடுப்பதே நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.