சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை: சிவகங்கையை சேர்ந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிறுமி பலாத்கார வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை அருகே வைரவன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி, இவர், 15 ஆண்டுகளுக்கு முன் சிஆர்பிஎப் போலீஸாக வட மாநிலத்தில் வேலை பார்த்தார். அப்போது தனது 3 வயது மகளை மாமனார் வீட்டில் விட்டுச்சென்றார். தன்னுடன் தங்கியிருந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முத்துப்பாண்டி பணி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 8 ஆண்டு களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய முத்துப்பாண்டி 10 வயதான மகள், மகன் கார்த்திக்குடன்,12 சிவகங்கையில் மஜீத் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
சிவகங்கை அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டு சிறுமி பிளஸ் 2 படித்து முடித்தார். கல்லூரி படிப்பு தொடர்பாக கோவையில் உள்ள தனது அத்தையுடன் சிறுமி ஆலோசனை நடத்தினார். அப்போது தந்தை, சகோதரர் உட்பட பலர் பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து சிறுமி தெரிவித்ததை கேட்டு அத்தை அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜுன் 4ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் அமிர்தம் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக் ஆகிய இருவரை மறுநாளே கைது செய்தார். காரைக்குடி மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை 28 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தாத்தாவின் அத்துமீறல்
பாட்டி வீட்டில் வளர்ந்த சிறுமிக்கு 10 வயதுக்கு முன்னரே தாத்தா மூலம் பாலியல் தொந்தரவு இருந்துள்ளது. பின்னர் சிறுமியை தந்தை அழைத்துச் சென்று தன்னுடன் வளர்த்துள்ளார். மது அருந்திய பின் போதையில் மகளிடமே அத்துமீறி நடந்துள்ளார். தந்தையுடன் சகோதரரும் மதுப் பழக்கத்துக்கு ஆளானார். பின்னர் தந்தை பாணியிலேயே போதையில் சகோதரியிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
தந்தையும் சகோதரனும்
ஓய்வூதியமும் கிடைக்காத நிலையில், மதுவுக்காக நண்பர்கள், உறவினர்கள் பலரை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். நாளடைவில் என்ன நடக்கிறது என்பதையே அறியாத வகையில், போதைப்பழக்கத்துக்கு மகளை ஆளாக்கி அடிமையைப்போல் தந்தை நடத்தி வந்துள்ளார்.
போலீசார் பலாத்காரம்
சிறுமியின் வாக்குமூலம் குறித்து விசாரித்த போலீஸார் 2 பேரை மட்டும் கைது செய்தனர். அப்போதே போலீஸார் பலருடைய தொடர்பு இருந்த தகவல் கிடைத்தாலும் அது குறித்து விசாரிக்கவில்லை. வேலூர் அருகே ஏலகிரியில் தங்கியுள்ள சிறுமியிடம் காப்பக நிர்வாகிகள் நடத்திய விசாரணையில் போலீஸார் உட்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்திருந்தது தெரிந்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த தகவல் அடிப்படையில் வழக்கறிஞர் வின்சென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் போலீஸார் உட்பட பலரது தொடர்புகளை தெரிவித்திருந்தார். நீதிமன்றத்துக்கு பிரச்சினை சென்றதால், மீண்டும் விசாரணையை வேகப்படுத்தினர் அப்போது சில போலீஸாரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. கடந்த 7ம் தேதி சிவகங்கை நகர் காவல் நிலைய எஸ்ஐ சங்கர்,55, சிவகங்கையைச் சேர்ந்த முனியாண்டி மகன் சுரேஷ் குமார், 32, ராமமூர்த்தி மகன் செந்தில்குமார், 36, துரைமணி மகன் அரவிந்த், 25 ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
எட்டு பேர் கைது
அரசுப் பேருந்து நடத்துநர் நமச் சிவாயம், சிவகங்கை நகர் திமுக பொருளாளர் முத்துராக்கு ஆகிய இருவரையும் 8ம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் பலாத்கார வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கூடுதல் எஸ்.பி விசாரணை
இதனிடையே சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து முழுமையாக அறிய கூடுதல் எஸ்பி வந்திதா பாண்டே தலைமையிலான போலீஸார் காப்பகம் சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர், சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் உண்மையா எனவும் விசாரணை நடைபெற்றது.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இதனிடைய சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், ஏ.டி.ஜி.பி. ஆகியோரும் தன்னை பாலியல் கொடுமைப்படுத்தியதாக விசாரணைக் குழுவிடம் அந்த சிறுமி கூறியுள்ளதை அடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.