கோவில்களில் எல்லோருக்கும் ஒரே தரிசனம் தான் இருக்க வேண்டும்.. சபாஷ் ஹைகோர்ட்!
கோவில்களில் சாமியை அனைத்து மக்களும் ஒரே தூரத்தில் இருந்து தான் வழிபட வேண்டும் இதில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இலவச தரிசனமோ, கட்டண தரிசனமோ எதுவாக இருந்தாலும் கடவுளை இரண்டு வகை மக்களுமே ஒரே தூரத்தில் இருந்து தான் தரிசிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இலவச தரிசனம், கட்டண தரிசனம் என இரண்டு முறையில் பக்தர்கள் இறைவனை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் இலவச தரிசனம் செய்பவர்கள் சற்று தொலைவில் இருந்தே கடவுளை வழிபடவும் கட்டணம் செலுத்தி வழிபட வருபவர்கள் கடவுளுக்கு மிக அருகிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கடவுளை வழிபடுவதில் ஏன் இந்த பாகுபாடு என்று இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மனுவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டான் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதல் கோவில், தஞ்சாவூர் உப்பிலியப்பன் கோவில் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கடவுளை வழிபடுவதில் பாகுபாடு காட்டப்படுகிறது.
பாகுபாடு காட்டப்படுகிறது
கட்டணம் செலுத்தி வழிபட வருவோருக்கு நீண்ட நேரம் நின்று சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர், ஆனால் இலவச தரிசனம் செய்ய வருவோருக்கு இந்த வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. இது சமஉரிமை என்ற அடிப்படைக்கு எதிரானது, பணம் கட்டி தரிசிக்க வருவோர் சிறப்பாக நடத்தப்படுவதன் மூலம் பாகுபாடு என்பது எழுகிறது.
ஹைகோர்ட் விசாரணை
எனவே இந்த தேவையற்ற நடைமுறையை ஒழிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரி இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
பணம் சம்பாதிக்கும் இடமல்ல
அப்போது கருத்து கூறிய நீதிபதிகள் ஆலயங்கள் என்பது பணம் சம்பாதிக்கும் இடமாக இருக்கக் கூடாது. பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து சம உரிமையுடன் வழிபட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே கோவில்கள் உருவாக்கப்பட்டன.
ஒரே மாதிரி தான் நடத்தப்பட வேண்டும்
பணம் செலத்தி தரிசனம் செய்ய வருவோரோ அல்லது இலவச தரிசனம் செய்ய வருவோரோ யாராக இருந்தாலும் அவர்கள் ஒரே மாதிரி தான் நடத்தப்பட வேண்டும். கடவுளை இரண்டு வகை மக்களும் ஒரே தூரத்தில் நின்று தான் வழிபட வேண்டும் இதில் ஏன் வித்தியாசம் காட்டப்படுகிறது என்ற கேள்வி எழுப்பினர்.