என் வீட்டில் சோதனை நடக்கவில்லை...தினகரன் விளக்கம்!
தன்னுடைய வீட்டில் வருமான வரி சோதனை எதுவும் நடக்கவில்லை என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய வீட்டிற்கு வருமான அதிகாரி வந்து சென்றுவிட்டதாகவும் சோதனை எதுவும் நடக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : என்னுடைய வீட்டிற்கு இன்று காலை 8.30 மணியளவில் வருமான வரித்துறையினர் வந்ததாகச் சொன்னார்கள் ஆனால் வந்த ஒரு அதிகாரியும் சென்றுவிட்டார். இப்பேது காவல்துறையினர் மட்டுமே உள்ளனர்.
அதிகாரிகளுக்கு பாதுகாப்பாகத் தான் அவர்கள் வந்தார்கள், எங்களை கோ பூஜை செய்யக் கூடாது என்று தடுத்தார்கள். அதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவர்களுடன் வாதாடினேன், அதற்கு பின்னர் கோ பூஜை செய்துள்ளோம்.
இது வரை எந்த வருமான வரி சோதனையும் என் வீட்டில் நடக்கவில்லை. அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் என்று சொல்கிறார்கள், நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். என்னுடைய கவலையெல்லாம் பண்ணை வீடுகளில் நடக்கும் சோதனையில் அவர்களே ஏதாவது வைத்துவிட்டு எடுத்துவிடக் கூடாது என்பது தான் அதற்காக என்னுடைய ஆட்களை அங்கு அனுப்பி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.