டென்ஷன் ஓவர்.. முழு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ரெடியாகிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு!
Recommended Video
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு முழு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க நேரம் கூடி வந்துள்ளதாக அதிமுக அலுவலகங்களை சுற்றி திரியும் பட்சிகள் படபடத்து சொல்கின்றன.
"எல்லாம் இரட்டை இலை வந்த நேரம்தான்.." என்று கண் சிமிட்டி பறக்கின்றன அந்த பட்சிகள். விஷயம் இதுதான். தினகரனை நம்பி அவர் பின்னால் அணி வகுத்த எம்எல்ஏக்கள் ஒருவரை தொடர்ந்து ஒருவராக எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வர உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
திரைமறைவில் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்
எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். இருப்பினும் சளைக்காமல் தினகரன் கோஷ்டியிலேயே இருக்கிறார்கள். ஆனால், இப்போது அவர்கள் நிலைமை திரிசங்கு சொர்க்கம் போல, அங்கும் போக முடியாமல், இங்கும் செல்ல முடியாமல் உள்ளது.
ஒரே வழி
தினகரன் கோஷ்டி தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தங்கள் அரசியல் வாழ்வை காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி எடப்பாடி அணியில் அதாவது அதிமுகவில் இணைவதுதான். தினகரன் புதுக்கட்சி தொடங்கி அதில் இவர்கள் இணைந்தாலோ கட்சி தாவல் தடைச் சட்டம் பாய்ந்துவிடும். எனவே 'தாய்க்கழகம்' திரும்புவதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை.
சபாநாயகர் கையில் முடிவு
மீண்டும் எடப்பாடி அணியில் சேர்ந்தால் அதற்கு முதலில் சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் தர வேண்டும். அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு தகுதி நீக்க நடவடிக்கையை வாபஸ் பெறலாம். அப்படியானால் மீண்டும் கம்பீரமாக எம்எல்ஏவாக 18 பேரும் வலம் வர முடியும்.
இடைத்தேர்தல் நடக்கும்
ஆனால் எதிர்த்தால் தகுதி நீக்கம் காரணமாக இடைத் தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்படும். அதை அவர்களில் பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள் என்றே தெரிகிறது. இரட்டை இலை சின்னம் இல்லாமல் அவர்கள் போட்டியிட்டால் வெற்றி அரிதாகிவிடும்.
ரகசிய பேச்சுவார்த்தை
இதையெல்லாம் சீர்தூக்கி பார்த்து, இரட்டை இலை சின்னம் எங்கே உள்ளதோ அங்கே நாங்கள் இருப்போம் என்று ஒரு காரணத்தை கூறியபடியே, எம்எல்ஏக்கள் அணி மாற தயாராகி வருகிறார்கள். ஓரிருவரை தவிர பெரும்பாலான தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எடப்பாடி அணி நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீண்டும் முழு பெரும்பான்மையோடு ஆட்சியை தொடரும் என தெரிகிறது.