தைரியம் இருந்தால் எடப்பாடி தேர்தலில் நின்று முதல்வராகட்டும்... சீறும் செந்தில்!
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அதிமுகவை கோமா நிலைக்கு கொண்டுபோய்விட்டதாக நடிகரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செந்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : கட்டுப்பாட்டுடன் இருந்த கட்சியை கோமா நிலைக்கு கொண்டு போய்விட்டனர் ஓபிஎஸ், ஈபிஎஸ் என்று அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
நடிகரும், அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளருமான செந்திலை தற்போது அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக டிடிவி தினகரன் நியமித்துள்ளார். அந்தப் பதவியில் இருந்த கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து புதிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் செந்தில் தினகரனை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் இக்கட்சி நன்றாகத்தான் இருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அவர்களை அங்கு வைத்திருந்தார்.
தினகரன் தான் டாக்டர்
ராமாயணத்தில் ஒரேயொரு சகுனிதான் உண்டு. இங்கு ஓ.பன்னீர்செல்வம் அணியில் சில சகுனிகளும், முதல்வர் பழனிசாமி அணியில் சில சகுனிகளும் உள்ளனர். அதிமுகவை அந்த அணிகள் கோமா நிலைக்கு கொண்டுவந்துவிட்டன. அதை சரிசெய்ய நல்ல டாக்டர் வேணும். அந்த டாக்டர் தினகரன்தான்.
இது தான் தர்மயுத்தமா?
ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் என்ன செய்கிறார்கள் என்று மக்கள் கண்ணுக்கு தெரிகிறது. ஜெயலலிதா சொன்னார்கள் இந்த கட்சி 100 ஆண்டுகளையும் தாண்டி இருக்க வேண்டும் என்று. பணமும், பதவியும் தான் தர்ம யுத்தமா? எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், அவர்களக்கு பதவி கொடுக்கலாமே நீங்களே தான் பதவியில் இருக்க வேண்டுமா?
ஒற்றுமை வேண்டும்
கட்சிக்காரங்களுக்கு ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் தினகரன் கூறினார். நானும், ஐசரி வேலனும் ஒன்றாகத்தான் தலைவர் காலத்தில் சேர்ந்தோம். அதற்கு பின்னர் சேவல் சின்னத்துக்காக திருச்சி ஒத்தக்கடையில் பேசும்போது, அந்த மேடையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். யாரும் காணும். நான் அப்ப பார்த்தது திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன், கோவை தம்பி, கருப்பசாமி பாண்டியன், செங்கோட்டையன் ஆகியோரைத்தான்.
ஆதி காலத்தில் இருந்து
எனக்கு பொறுப்பு அளித்தது குறித்து குமார் எம்பி விமர்சனம் செய்கிறார். நான் கட்சியில் எம்ஜிஅர் காலத்தில் இருந்து உழைக்கிறேன், எனக்கு பணம் முக்கியமில்லை என்றுமே, எனக்கு கடன் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் சென்று நின்றவன் கிடையாது நான். எம்ஜிஆருக்காக உழைத்தேன், ஜெயலலிதாவிற்காக உழைத்தேன்.
மீண்டும் போட்டியிடுங்கள்
ஒற்றுமையாக இருந்தால் தான் கட்சி நன்றாக இருக்கும். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரால் இந்தக் கட்சியே வீணாகிறது. நாங்கள் முதல்வராக ஏற்றுக் கொண்டது சசிகலாவைத் தான். சசிகலா தேர்ந்தெடுத்ததால் தான் நீங்கள் முதல்வர். தைரியம் இருந்தால் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று வாருங்கள் உங்களை முதல்வராக ஏற்றுக் கொள்கிறோம், என்று செந்தில் கடுமையாக விமர்சித்தார்.