திவாகரனை வம்பிழுக்கவே மன்னார்குடியில் கூட்டம்- தொடரும் தினகரனின் சீண்டல்!
தங்களை வம்பிழுத்து சீண்டி பார்க்க வேண்டும் என்பதற்காகவே மன்னார்குடியில் திடீர் பொதுக்கூட்டத்தை தினகரன் ஏற்பாடு செய்ததாக திவாகரன் கோஷ்டி கொந்தளித்து போயுள்ளது.
மன்னார்குடி: அதிமுக துணைப் பொதுச்செயலர் தினகரனுக்காக அதிமுக ஆட்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்த வினோதம் மன்னார்குடியில் அரங்கேறியுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தினகரன் ஆதரவாளர்கள் நாஞ்சில் சம்பத், கர்நாடக புகழேந்தி மற்றும் நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோரை மன்னார்குடியைவிட்டு போலீசார் வெளியேற்றிய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன். அவருக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி ஆகியோர் கொண்ட இருவர் அணி, சில மாவட்டங்களில் கூட்டம் நடத்தியது.
உசிலம்பட்டி உள்பட சில மாவட்டங்களில் நடந்த கூட்டத்துக்கு பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் வரவழைக்கப்பட்டார்கள். உடனே, மக்கள் மத்தியில் தினகரனுக்கு ஆதரவு பெருகிவிட்டது என செய்தி பரப்பினர்.
கொங்கு கோஷ்டி
இந்நிலையில் சிறையில் இருந்து தினகரன் வெளியே வந்ததும், முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அவரைச் சென்று சந்தித்தனர். கொங்கு மண்டலத்தின் தோப்பு வெங்கடாச்சலம், செந்தில்பாலாஜி, பழனிப்பன் ஆகியோரும் சென்று பார்த்தது எடப்பாடிக்குக் கூடுதல் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியது.
மன்னார்குடியில் கூட்டம்
திகார் சிறையில் இருந்த வந்த பிறகு, தினகரனுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் தலைமையில் கூட்டம் நடக்கவில்லை. இதையடுத்து, அவரை அழைத்த தினகரன், மன்னார்குடியில் கூட்டம் போடுங்கள் என உத்தரவிட்டார்.
போலீஸ் அனுமதி மறுப்பு
தமது தலைமையின் கட்டளையை சாசனமாக எடுத்துக் கொண்ட சம்பத், கூட்டம் தொடர்பாக ஆலோசித்து வந்தார். மன்னார்குடியில் நேற்று நடப்பதாக இருந்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
சீண்டத்தான்..
அங்கே கட்டப்பட்டிருந்த பேனர் மற்றும் சுவரொட்டிகளையும் கிழித்துவிட்டனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய மன்னார்குடி உறவினர் ஒருவர், திவாகரனை சீண்டிப் பார்க்கும் வேலைகளில் இறங்கிவிட்டார் தினகரன். இதுவரையில் மாவட்டத் தலைநகரங்களில் கூட்டம் நடத்தியவர், நேற்று மன்னார்குடியில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டதும் இதற்காகத்தான்.
ரத்து செய்ய வைத்த திவாகரன்
இதை அறிந்து நேரடியாகத் தலையிட்டு கூட்டத்தை ரத்து செய்ய வைத்துவிட்டார் திவாகரன். சிறையில் இருந்த வந்த பிறகு எடப்பாடியைக் கட்டுப்பாட்டில் வைக்க, தனக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களை திரட்டினார் தினகரன். மீண்டும் கட்சிக்குள் தினகரன் வலம் வருவதை திவாகரன் விரும்பவில்லை.
வீம்புக்கு கூட்டம்
தனக்கும் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக'த் தகவல் பரப்பினார். திவாகரனும் நடராசனும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். தினகரனுக்கு எதிரான வியூகங்களை வேகப்படுத்தி வருகின்றனர். அண்மையில், சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து நடக்கும் விஷயங்களைப் பட்டியலிட்டனர். தினகரனின் கட்சிப் பதவியைப் பறிக்க வேண்டும் என நெருக்குதல் கொடுத்தனர். இதைக் கண்ட தினகரன், இவர்களுக்கு நான் யார் என்று காட்டுகிறேன்' என வீம்பு காட்டினார். மன்னார்குடியில் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தார்.
கொந்தளிப்பில் திவாகரன்
இந்த விஷயத்தில் திவாகரனை சீண்டிப் பார்க்க நினைத்தார் தினகரன். மன்னார்குடியில் கூட்டம் நடந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. கட்சி நிர்வாகிகளின் அனுமதி இல்லாமல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என திவாகரன் ஆதரவாளர் மனு கொடுக்க, மேடை, மைக் செட்கள், பிளக்ஸ்போர்டுகள் அகற்றப்பட்டன. கூட்டத்தில் உரையாற்ற வந்த நாஞ்சில் சம்பத், புகழேந்தி, குண்டுகல்யாணம் ஆகியோர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சசிகலா குடும்பத்தில் இருந்து தினகரன், டாக்டர்.வெங்கடேஷ், விவேக் ஆகியோரை முழுமையாக ஒதுக்கி வைக்கும் வேலைகளை திவாகரன் தரப்பினர் தீவிரமாக செய்து வருகின்றனர். 'கார்டனில் இருந்தும் இந்தக் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்' என அவர் நினைக்கிறார். சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, தினகரன் செய்த அத்தனை காரியங்களையும் சசிகலாவிடம் முழுமையாகத் தெரிவித்துவிட்டனர். எடப்பாடிக்கு எதிராக தினகரன் களமிறங்கினால், தினகரனுக்கு எதிராக திவாகரன் நேரடியாகக் களமிறங்குவார். இதைப் பற்றி எடப்பாடிக்கும் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் திவாகரன் என்கின்றனர்.