தினகரனின் 'தில்லான' பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு கிடைத்த பரிசுதான் ஆர்.கே.நகர் வெற்றி!
பாஜகவை தினகரன் உக்கிரமாக எதிர்த்ததாலேயே ஆர்.கே.நகரில் வெல்ல முடிந்தது என்பதுதான் கள யதார்த்தம்.
சென்னை; தினகரனின் படுதில்லான பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு கிடைத்த பரிசுதான் ஆர்.கே. நகர் வெற்றி என்பதுதான் யதார்த்தம்.
2014-ம் ஆண்டு பாஜகவை மத்தியில் மாற்றத்துக்காக அமர வைத்தனர் வாக்காளர்கள். கடந்த கால காங்கிரஸ் அரசுகளைவிட பாஜக முன்வைத்த கோஷங்கள் வாக்காளர்களை கவர்ந்தன.
ஆகையால் மாற்றம் வரும் என்கிற பெருநம்பிக்கையோடு காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. வெகுஜன மக்களுக்கு விரோதமான இந்துத்துவா கொள்கைகளைத் திணிப்பதில் பாஜக அரசும் அதன் தலைவர்களும் காட்டிய மூர்க்கத்தனம், நிகழ்த்திய வன்முறைகள் மக்களை மிரள வைத்தன.

அதிகார துணை
பாஜகவின் வன்முறை முகம் மக்களை மெல்ல மெல்ல அக்கட்சியிடம் இருந்து அன்னியப்பட வைத்தது. ஆனாலும் அசராத பாஜகவோ, அதிகாரத்தின் துணையோடு அனைத்தையும் சாதிக்கலாம் என சலங்கை கட்டி ஆடியது.

தமிழகமே எதிர்ப்பு
குறிப்பாக தமிழகத்தின் பரம எதிரியாகவே மத்திய அரசும் பாஜகவும் உருமாறிப் போனது. தமிழகத்தின் அத்தனை உரிமை பிரச்சனைகளுக்கும் பாஜகதான் எதிரியாகவும் துரோகியாகவும் இருந்தது. திராவிடர் இயக்கம் மட்டுமே எதிர்ப்பைக் காட்டி வந்த பாஜகவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நின்றது.

மவுனியாக தமிழகம்
இந்நிலையில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பம் விஸ்வரூபமெடுத்தது. அதை தமிழக மக்கள் விரும்பவில்லை. அப்போது சசிகலா குடும்பத்துக்கு எதிராக பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டும் காணாமலே தமிழகமும் இருந்தது.

கோபத்தில் தமிழகம்
ஆனால் தமிழகத்தின் உரிமைகள் அத்தனையையும் கபளீகரம் செய்து கொண்டே வேட்டையாடுதலை நிகழ்த்திய பாஜக மீது கடும் கோபம் கொண்டது தமிழகம். ஆகையால் சசிகலா குடும்பம் மீதான ஒடுக்குமுறைகளையும் தமிழகத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே மக்கள் பார்க்கத் தொடங்கினர்.,

உரக்க எதிர்ப்பு
குறிப்பாக இந்தியா முழுவதும் முதல் முறையாக சசிகலா குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மாபெரும் வருமான வரிசோதனை அந்த குடும்பத்துக்கு அனுதாபத்தைத்தான் தேடி கொடுத்தது. இதனால் எல்லாவற்றையும் பறிகொடுத்த சசிகலா குடும்பம், இழப்பதற்கு இனி எதுவுமில்லை என முன்னைவிட உக்கிரமாகவே பாஜகவை உரத்து எதிர்த்தது.

பம்மியவர்களுக்கு மரண அடி
தமிழக மக்களின் இயல்பான பாஜகவுக்கு எதிர்ப்பான குரலோடு சசிகலா குடும்பத்தின் உரத்த முழக்கமும் இணைந்து கொண்டது. இதனாலேயே தங்களில் ஒருவராக சசிகலா குடும்பத்து தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் கொண்டாடி வெல்ல வைத்திருக்கின்றனர். அதேநேரத்தில் டெல்லியிடமும் பாஜகவிடமும் பம்மியவர்களுக்கும் தங்களது குடுமியை விட்டுக் கொடுத்தவர்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது ஆர்.கே.நகர் தேர்தல்!












Click it and Unblock the Notifications