ஆபரேசனை ஆரம்பித்த டிடிவி தினகரன்.... ஜெ., நியமித்த மாவட்ட செயலாளர்கள் நீக்கம்
மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்த மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக நியமித்து வருகிறார் டிடிவி தினகரன்.
சென்னை: அதிமுகவில் ஒபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக நியமித்து வருகிறார்.
கட்சியில் ஆபரேசன் செய்யும் போது அது அதிரடியாக இருக்கும் என்று கூறினார் டிடிவி தினகரன். நேற்று முதல் கட்சியில் உள்ள முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகளை நீக்கி விட்டு தனது ஆதரவாளர்களை நியமன செய்து வருகிறார்.
ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனக்கு ஆதரவாக உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமித்து கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டார் டிடிவி தினகரன்.
ஆர்.பி உதயகுமார்
எம்.பி வைத்திலிங்கத்தை நேற்று கட்சிப்பதவியில் நீக்கிய டிடிவி தினகரன், இன்று வரிசையாக பலரின் கட்சிப்பதவிகளை பறித்தார். ஆர்.பி உதயகுமார், எம்ஆர் விஜயபாஸ்கர், கே.சி வீரமணி, ஆர். காமராஜ், உள்ளிட்டோரின் கட்சிப்பதவியை பறித்து விட்டு தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார்.
ஆர். காமராஜ்
திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர் காமராஜ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாவட்ட செயலாளராக எஸ் காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.சி வீரமணிக்கு பதிலாக ஆம்பூர் எம்எல்ஏ பாலசுப்ரமணி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி
கரூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராவார். இவருக்குத்தான் அமைச்சர் பதவியை கேட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்தார் டிடிவி தினகரன்.
ஜெயலலிதா கல்தா கொடுத்தவர்
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் மாவட்ட செயலாளராகவும், போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி. அவரது பதவியை பறித்து விட்டு எம்ஆர் விஜயபாஸ்கரை மாவட்ட செயலாளராக அறிவித்தார். கடந்த சட்டசபை தேர்தலின் போது வெற்றி பெற்று எம்எல்ஏவான விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார்.
நீக்கம், நியமனம் செல்லுமா
டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.இப்போது டிடிவி தினகரன் நிர்வாகிகளை நீக்கியும், புதிதாக நியமித்தும் வருகிறார். இந்த நீக்கமும் நியமனமும் செல்லுமா?