"முடிவு" எடுத்து விட்டாரா தினகரன்?.. ஆளுநரை சந்திக்க "டைம்" கேட்கிறார்!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தினகரனுக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 420 என இருவரும் வெளிப்படையாக விமர்சிக்கும் அளவுக்கு அவர்களின் 'அரசியல்' போய்க்கொண்டிருக்கிறது.
முதல்வர் பதவியில் எடப்பாடியை உட்காரவைத்தற்கு அவர் நன்றாகவே நன்றி உணர்ச்சியை காட்டுகிறார் என தினகரனும், திவாகரனும் ஆதங்கப்பட்ட நிலையில் நேற்று தஞ்சையில் பல கட்ட விவாதங்கள் நடந்துள்ளன. சந்தானலட்சுமி படத்திறப்புவிழாவுக்காக வந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் திவாகரன், தினகரனை சந்தித்தனர். அவர்களிடம் முதல்கட்டமாக ஆலோசித்தனர்.
அதில், எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்த எம்.எல்.ஏ.க்கள், இனியும் துரோகியை மன்னிக்காதீர்கள். ஓபிஎஸ் தம்மை ஆதரிப்பார் என்பதால்தான் ஆட்சிக்கு பங்கம் இல்லைன்னு நினைக்கிறார் எடப்பாடி. அதை உடைக்க ஆட்சி கவிழ்ப்பில் நாம் இறங்கியே தீர வேண்டும்.
ஒழிக்க நினைக்கும் கூட்டம்
சின்னம்மாவையும் உங்களையும் ஒழிக்க நினைக்கும் கூட்டத்தின் ஆட்சி இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன? துனிச்சலாக முடிவெடுங்கள். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் நிற்போம் என ஆவேசப்பட்டுள்ளனர். அவர்களை அமைதியாக, பொறுமையாக இருங்கள் என கேட்டுக்கொண்டார் திவாகரன். இதனையடுத்து திவாகரன், தினகரன் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
விலைக்கு வாங்கி விட்டால்
எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நினைக்கிறார் எடப்பாடி. ஒரு வேளை முரண்டு பிடிக்கும் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என திட்டமிட்டுத்தான் நேரடியாக நம்மோடு மோதுவதற்கு தயாராகியிருக்கிறார். எம்.எல்.ஏ.க்களும் , நாலு வருசம் ஆட்சி இருக்குதே, அதுவரை சம்பாதிக்கலாமே, அதையேன் இழக்க வேண்டும்? தேர்தல் வந்தால் மீண்டும் நாம் ஜெயிப்போமா? என எம்.எல்.ஏ.க்கள் யோசிக்கிறார்கள்.
25 பேர் நிக்க மாட்டாங்களா என்ன?
இதைத்தான் எடப்பாடி தனக்கு சாதகமாக நினைக்கிறார். அதனால் இதை முதலில் உடைக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் நம்மை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 60, 62 ஆக இருக்கிறது. இதில் சூழல்களுக்கேற்ப முடிவெடுத்து, சிலர் மாறினாலும் 25 பேர் கடைசி வரை நமக்காக நிற்கமாட்டார்களா என்ன? அதனால், அவர்களிடம் பேசி, அவர்களின் உறுதி தன்மையைப் பெறுவோம்.
தேவைப்பட்டால் வாபஸ் பெறுவோம்
எடப்பாடி, பன்னீரின் போக்குகளை அறிந்து அதற்கேற்ப நாம் முடிவெடுக்க வேண்டும். நம்மை ஒழித்துக்கட்ட அவர்கள் துனியும்பட்சத்தில், எடப்பாடிக்கு தந்துள்ள ஆதரவை நாங்கள் விலக்கிக்கொள்கிறோம் என 25 எம்.எல்.ஏக்களும் கையெழுத்துப்போட்டு கவர்னரிடம் கடிதம் தந்துவிடுவோம். அப்போ ஆட்சியை தக்க வைக்க திமுகவிடம் ஓடுவார்கள். திமுக ஒத்துழைக்காது. ஆட்சி கவிழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்றெல்லாம் விவாதித்துள்ளனர்.
ஆளுநரை சந்திக்க டைம் கேட்ட தினகரன்
இதன் ரொடர்ச்சியாக , கவர்னரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்டு கேட்டு நேற்று மாலையில் தினகரன் தரப்பிலிருந்து கவர்னர் மாளிகையை அணுகியுள்ளனர். கவர்னர் இல்லாததால், அவர் சென்னை திரும்பியதும் உங்களின் அப்பாயின்ட்மென்ட் குறித்து அவரது கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என பதில் தந்துள்ளது கவர்னர் மாளிகை. கவர்னர் இன்று சென்னை வந்து விட்டார். ஒருவேளை, கவர்னரின் அப்பாயின்ட்மென்ட் உடனடி கிடைக்கும்பட்சத்தில், எடப்பாடி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள கடிதம் கொடுக்கப்படும் என்றே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேசிக் கொள்கிறார்கள்.