ஓபிஎஸ் அணியிலிருந்து மாற ரூ. 5 கோடி பேரம்… எம்எல்ஏ சண்முகநாதன் பகீர் குற்றச்சாட்டு
ஓபிஎஸ் அணியில் இருந்து தினகரன் அணிக்கு மாறுவதற்கு ரூ. 5 கோடி வரை பேரம் பேசப்பட்டு வருவதாக எம்எல்ஏ சண்முகநாதன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான சண்முகநாதன் எம்எல்ஏ, தினகரன் மற்றும் எடப்பாடி அணியினர் பற்றி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். தங்கள் அணிக்கு வருவதற்கு ரூ. 5 கோடி வரை பேரம் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் விதித்த 60 நாள் கெடு நாளையோடு முடிகிறது. இந்நிலையில், எடப்பாடி அணியினர் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட முடிவு என்ன என்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர். அதே போன்று ஓபிஎஸ் அணியினரும் ஆலோசித்து வருகின்றனர். ஆனால் இரண்டு அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை என்ற அளவிற்கு சண்முகநாதன் எம்எல்ஏ இன்று ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பேரம் பேசி வருவதாக சண்முகநாதன் தெரிவித்தார். ஒருவருக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை பணம் தர, தினகரன் மற்றும் பழனிச்சாமி அணியினர் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணியில் உள்ள சண்முகநாதனின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளதாக அதிமுக வட்டாரம் தெரிவிக்கிறது.