பொதுக்குழுவே அல்ல... போனால் நடவடிக்கை பாயும்- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிச்சாமி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கூட்டத்திற்கு செல்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை: செப். 12 ஆம் கூடும் பொதுக்குழுவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு சில நாட்கள் அமைதியாக இருந்த தினகரன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுகவின் சட்ட விதி
கழகத்தின் சட்டதிட்ட விதிமுறை 20 பிரிவு 6-ன் படி பொதுக்குழுவையும், செயற்குழுவையும் பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். கழகத்தின் சட்டதிட்ட விதிமுறை 19 பிரிவு 7-ன் படி பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக்கொண்டால், பொதுக்குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாள்களுக்குள் பொதுச்செயலாளர் கூட்ட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சட்ட திட்ட முறைகளும் இதையே பறைசாற்றுகின்றன.
எந்த தொடர்பும் கிடையாது
ஆகவே, செப்டம்பர் 12-ம் தேதியிட்ட கூட்டம் தொடர்பான அறிவிப்புக்கும், நமது கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் முன் தாக்கல்செய்துள்ள தங்களின் வழக்கு, பொருண்மைகளுக்கு எதிரான வகையிலேயே வழக்கைத் தொடுத்தவர்கள் செயல்பட்டுவருகிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
குழப்பம் ஏற்படுத்த முயற்சி
பொதுச்செயலாளர் சசிகலாவால் கட்சியின் சட்ட திட்ட விதிமுறைகளின் படி கூட்டப்படும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களுக்கு மட்டுமே சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது . கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுத்தும் கெட்ட நோக்கத்தோடு, கட்சிக்குப் பல சிக்கல்களை உருவாக்க வேண்டும் எனும் கூட்டுச்சதியோடு, 12.09.2017 அன்று பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடக்கவிருப்பதாக, சிலர் திட்டமிட்டு செய்தி பரப்பிவருகிறார்கள்.
|
கடுமையான நடவடிக்கை
கட்சியின் உண்மைத் தொண்டர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம். அப்படி நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்க வேண்டாம். மீறி கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்ட திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலாவின் ஒப்புதல்
மேற்படி, 12.09.2017 கூட்டம் தொடர்பான சட்டத்துக்குப் புறம்பான அறிவிப்பைச் செய்த நபர்களின் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கையைத் தொடர உள்ளேன். பொதுச்செயலாளர் தியாக தலைவி சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று தினகரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.