தினகரன் தலைமையில்தான் இப்தார் நோன்பு நடக்கும்... அடித்துச்சொல்லும் - தங்கத்தமிழ் செல்வன்
டிடிவி தினகரன் தலைமையில்தான் இப்தார் நோன்பு நிகழ்வு நடக்கும் என்று ஆன்டிபட்டி எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: வர்த்தகமையத்தில் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பங்கேற்பார் என்றும் அவர் தலைமையில்தான் நோன்பு திறப்பு நடைபெற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதிமுகவில் நிர்வாகிகளும், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அடக்க ஒடுக்கமாய் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தனர். அவர் தலைமையில் மட்டுமே அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். அவரால் பங்கேற்க முடியாத பட்சத்தில் அவரது ஆசியுடன் நிகழ்ச்சிகன் நடைபெறும்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சிதறிப் போய்விட்டது. மொத்தம் உள்ள 135 அதிமுக எம்எல்ஏக்களில் 12 பேர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் உள்ளனர். மீதமுள்ள 122 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. அம்மா அணியில் உள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து டிடிவி தினகரன், சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறி விட்டனர்.
திகார் சிறையில் இருந்து தினகரன் ஜாமீனில் வெளியே வந்த அவர் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபடபோவதாக தெரிவித்தார். இதனையடுத்து தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து வருகின்றனர்.

34 பேர் ஆதரவு
122 எம்எல்ஏக்களில் 34 பேர் டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக மாறி உள்ளதால் தினகரன் அணி உருவாகி உள்ளது.
இவர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
கட்சிக்கு தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி என்பதே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் கோரிக்கை.

தினகரனுக்கு முன்னுரிமை
தினகரன் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள். எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையும் தினகரன் தலைமையிலேயே நடத்த வேண்டும் என்பது தங்கத்தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்எல்ஏக்களின் கோரிக்கை.

இப்தார் நோன்பு திறப்பு
சென்னையில் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோஸ்கட் ஆக உள்ளது.

தினகரன் பங்கேற்பார்
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தினகரன் நிச்சயம் பங்கேற்பார் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ் செல்வன் கூறியுள்ளார். டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அவர் மற்ற அமைச்சர்களுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி உள்ளார். நிச்சயம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பங்கேற்பார்.

தேனியில் பொதுக்கூட்டம்
தேனியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் அக்கூட்டத்துக்கு டி.டி.வி. தினகரன் தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் தெரிவித்து விட்டு முடிவு செய்யலாம் என்று கூறி உள்ளார்.

சசிகலாவை சந்திப்போம்
சட்டசபைக் கூட்டத்தொடர் நடப்பதால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை எங்களால் சந்திக்க முடியவில்லை. கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் நாங்கள் அனைவரும் அவரை சந்திக்க உள்ளோம்.

என்னதான் நடக்கும்?
இப்தார் நோன்பு திறப்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏவோ, டிடிவி தினகரன் பங்கேற்பார் என்று கூறியுள்ளார். ஜூன் 21ஆம் தேதியன்று என்னதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications