டிடிவி தினகரன் ராஜினாமா? மழுப்பிய திண்டுக்கல் சீனிவாசன்
டிடிவி தினகரனை நேரில் சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அப்போது டிடிவி தினகரனை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் மழுப்பலான பதிலையே அளித்தார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அப்போது டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மழுப்பலான பதிலையே அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக இரு அணிகளாக உடைந்தது. இதனால் பங்காளிகளாக இருந்தவர்கள் கூட பகையாளிகளாக மாறினர். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர். இப்போது இரு அணிகளும் இணைந்த கைகளாக மாறப்போகின்றனர்.
அணிகளை இணைப்பதற்கு இரு தரப்பினரும் தீயாக வேலை செய்யத் தொடங்கிவிட்டனர். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்பதே ஓபிஎஸ் அணியின் முக்கிய கோரிக்கை எனவே இது பற்றி முக்கிய ஆலோசனையை அமைச்சர்கள் நேற்றிரவு நடத்தினர்.

குழு அமைப்பு
ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குழு அமைத்துள்ளார். அதிமுக இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க 8 அமைச்சர்கள், ஒரு எம்.பி. கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, வைத்தியலிங்கம், வேணுகோபால், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், சிவி.சண்முகம் குழுவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

டிடிவி தினகரன் ராஜினாமா?
டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளச் சொல்லி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். இதையே பிற அமைச்சர்களும் வழிமொழிய, சசிகலாவிடம் கேட்டு விட்டு முடிவு செய்யப்போவதாக கூறினார் டிடிவி தினகரன், ஆனால் சசிகலாவை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார்.

லஞ்சவழக்கு
இந்த நிலையில் டிடிவி தினகரன் மீது சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு பாய்ந்துள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். எந்த நேரத்திலும் டிடிவி தினகரன் வீட்டிற்கு போலீசார் வரலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது வழக்கறிஞருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் செங்கோட்டையன்
இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசியது பற்றி தெரிவித்தனர்.

சீனிவாசன் மழுப்பல்
முன்னதாக டிடிவி தினகரன் வீட்டிற்கு வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் சந்திப்பு, ஆலோசனைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இது சாதாரண சந்திப்புதான் என்றார். டிடிவி தினகரனை ராஜினாமா செய்ய அமைச்சர்கள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், அப்படி எல்லாம் எதுவும் இல்லை, இது சாதாரண அமைப்புதான் என்றார்.












Click it and Unblock the Notifications