மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பும் நாள் என்றாலே பதறும் போலீஸார் !
நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகங்களில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை : நெல்லையில் நடந்த கந்துவட்டி தீக்குளிப்புக்குப் பிறகு தமிழகம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்ப்பு நாளில் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெறும். அப்போது மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து அனைத்து விதமான புகாரையும் அளிக்கலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் அங்கே இருப்பர், சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர்கள் உத்தரவிடுவார்கள்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லையில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மனு கொடுக்க வந்த இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, இரு மகள்களோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வந்தது.
சோதனைக்குப் பின்பே அனுமதி
இந்த சம்பவத்தில் மேல்விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வரும் அனைவரையும் முழுதாக சோதனையிட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள், இந்த சோதனைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கும் விதிவிலக்கு இல்லை.
மாவட்டங்களில் பரபரப்பு
கடந்த வாரங்களில் நடந்த கூட்டத்தில் ஈரோடு மற்றும் கோவையில் சிலர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதுபோல பல மாவட்டங்களிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இதனால்ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதிக அளவில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நடவடிக்கை இல்லாததால் ஆர்ப்பாட்டம்
இன்று நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டு ஒவ்வொருவராக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வாசல்களில் மூன்று வாசல் அடைக்கப்பட்டு ஒரே வாசல் வழியாக சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகிறார்கள்.விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் அதிர்ச்சி
அதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய கூட்டத்தில், சொத்துகளை அபகரித்த உறவினர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் அன்னக்கிளி என்னும் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீஸார் அவரை தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு வாரமும் இதுபோல் நடக்கும் செயல்களால் பாதுகாப்புக்கு மேற்கொள்ளும் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அரசு விரைவில் ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புலம்பி வருகிறார்கள்.