திணறடிக்கும் தீபாவளி பட்டாசு விலை: இந்த வருடமும் 10% விலை அதிகரிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளை விட பட்டாசுகள் விலை 10 சதவீதம் அதிகரித்து காணப்படுகின்றது.
மேலும், இந்த ஆண்டு 17 வகையான புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை என்றாலே வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்புவது பட்டாசுகள் தான்.
புதிய ரக பட்டாசுகள்:
இதனால் ஆண்டுதோறும் புதுபுது ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு 17 புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
17 புதிய வகைகள்:
இதில் ஷூட்டிங் ஸ்டார், டி.வி.டவர், கோல்டன் ஸ்பைடர்,ஏரியல் அவுட், 4 கலர் பஸ்ட், கலர்தண்டர் போல்டு கோல்டு, ரெயின்போ தண்டர், பெஸ்டிவல் பால், எல்லோ சோவர் உள்பட ரக பட்டாசுகள் பிரபலமாகும்.
இரவு நேர கலக்கல்:
புதிய ரக பட்டாசுகள் அனைத்தும் இரவு நேரத்தில் வெடிக்கக் கூடியதாகும். இந்த பட்டாசுகள் இரவை பகலாக்க கூடிய வகையில் வண்ண வண்ண நிறங்களில் விண்ணை ஜொலிக்க வைக்கும்.
வண்ண வண்ண பந்துகள்:
இதில் டி.வி டவர் பட்டாசு வானில் வெடித்தவுடன் டி.வி வடிவில் காட்சியளிக்கும். பெஸ்டிவல் பால் பட்டாசு வானில் வெடித்தவுடன் வண்ண வண்ண பந்து வடிவில் வெடித்து சிதறும்.
விலை விவரங்கள்:
புதிய ரக பட்டாசுகள் ரூபாய் 200 முதல் ரூபாய் 700 வரையில் கிடைக்கும். 18 விதவிதமான பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூபாய் 510க்கும், 36 விதவிதமான பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூபாய் 1,180க்கும், 46 விதவிதமான பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூபாய் 1,740க்கும் உள்ளது.
10 சதவீதம் அதிகம்:
கடந்த ஆண்டை காட்டிலும் பட்டாசு விலை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே பட்டாசு விற்பனை சிறப்பாக நடைபெறும்.
மந்தமான ஆர்டர்கள்:
வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகளவில் ஆர்டர்கள் குவியும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளது. எனினும் பட்டாசு விற்பனை மிகவும் மந்தமாக இருக்கிறது.
சிறைதான் காரணம்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருப்பதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.