ரூ. 4000க்கு பதில் 2000 ரூபாய் தான் எடுக்க முடியும் என்பது கேலிக் கூத்து.. கி.வீரமணி கண்டனம்
மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கையில் மேலும் மேலும் மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஒரு நாளைக்கு 4000 ரூபாய் எடுப்பதற்கு பதிலாக 2000 ரூபாய்தான் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் அறிவிப்புகள் ஏழை - எளிய மக்களின் அன்றாட வாழ்வில் ஈட்டியைப் பாய்ச்சும் இரக்கமற்ற செயலாகவே இருக்கிறது.
ஒரு நாலாயிரம் ரூபாய் வங்கியில் எடுப்பதற்கு ஒரு நாளையே செலவு செய்ய வேண்டும் - அதன் காரணமாக அன்றாடம் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் மக்களின் சம்பாத்தியமும் இழப்பு! இன்றைக்கு வெளிவந்த ரிசர்வ் வங்கி அறிவிப்பிலோ, நான்காயிரத்துக்கு பதிலாக வெறும் 2000 ரூபாய் தான் எடுக்க முடியுமாம்! என்னே கேலிக் கூத்து!
நாடு எங்கே செல்லுகிறது? நாட்டு மக்களின் நிலை என்ன? மக்களின் வயிற்றுப் பசியோடும், வறுமையோடும் விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்!
பொறுமைக்கும் ஓரளவு எல்லை உண்டு என்ற நிலையை ஓர் அரசே ஏற்படுத்தி விடக் கூடாது. இந்தப் பிரச்சினைக்கு உடனடிப் பரிகாரம் தேவை - தேவை என்று கி.வீரமணி கூறியுள்ளார்.